»
S
I
D
E
B
A
R
«
social Normமும் மகளிர் தினமும்
Mar 8th, 2009 by பத்மா அர்விந்த்

வழக்கம் போலவே என் இன்பாக்ஸ் மகளிர்தினத்தை நினைவுறுத்தும் வண்ணம் அழைப்புக்களால் நிரம்பி இருந்தன. காலை உணவு, அல்லது சின்ன கூட்டம். ஒன்றில் கொண்டாடத்தான் வேண்டுமா மற்ற நாடுகளில் எத்தனை பெண்கள் கொடுமைப்படுத்தப்படுகிறார்கள், ஒரு மணிக்கு பத்தில் நான்கு பெண் ஏதேனும் ஒரு பாலியல் சித்திரவதைக்கு ஆளாகிறாள், இந்தியாவில் 19% திருமனமான 19இல் இருந்து 25 வயதுகுட்பட்ட பெண்களும் கம்போடியாவில் 35% மணமான பெண்களும் கணவனால் ஒருமுறையேனும் அடிக்கப்பட்டிருக்கிறாள், இன்னும் இந்தியாவில் விதவைகள் கொடுமைப்படுத்தப்படுகின்றார்கள், இங்கே முதியோர் இல்லங்களில் பெண்கள் பாலியல் கொடுமைக்கும் ஆளாகிறார்கள், இந்த நிலையில் வேண்டுமா மகளிர் தினம் யோசியுங்கள் என்ற கடிதம்.

பாஸ்நியா முதல் இன்றைய இராக், ஈழம் வரை போர்க்காலங்களில் பெண்கள் படும் அவதிகள் அதிகம். ஆண்கள் பலர் கொல்லப்படுவதால், குழந்தைகளின் பசிதீர்க்க, முதியோருக்கு உணவு வழங்க, குடும்பத்தை சற்றேனும் குறைவில்லாமல் நடத்த பெண்கள் பணிக்கு செல்கிறார்கள். முதல்முறையாக பணிக்கு செல்வதால் குறைந்த அளவு ஊதியம் கிடைக்கும் பணிகளில் இவர்கள் படும் பாலியல் தொல்லைகள் ஏராளம். போர் என்றாலே ஒரு நாட்டின் உடமைகளை கைக்கொள்வதோடு, பெண்களை பாலியியல் கொடுமைக்கு ஆளாக்குவது ஆண்கள் நிறைந்த இராணுவத்தில் ஒருவகை கொண்டாட்டமாகி இருக்கிறது. இதற்கு உளவியல் ரீதியாக பல காரணம் இருப்பினும் ஒரு வீட்டின் பெண் ஒருவகையில் இன்னும் ஒரு உடமையாகவே கருதப்படுவதால் அவளை சிதைப்பது என்பது அந்த வீட்டின் ஆணை உச்சகட்ட அவமானத்திற்கு ஆளாக்குவது முக்கிய காரணம், இரண்டாவதாக இவ்வாறான வன்புணர்வில் கருத்தரிக்கும் பெண்கள் மூலம் தங்கள் இனத்தை அங்கே வளர்க்கவும் நினைப்பது இன்னொரு காரணம். பெரும்பாலான போர்க்கால வன்புணர்வுகள் கருவில் முடிந்தால் அவர்களுக்கு அதை கலைப்பது மிகவும் முடியாத காரியம். அவ்வாறாக பிறந்த குழந்தைகள் அந்த வன்புணர்வு அனுபவத்தை நினைவுறுத்திக் கொண்டே இருப்பதால் சமூகத்தாலும் வெறுக்கப்படும் நிலைக்கு ஆளாவதால், போர் முடிந்த பின்னும் இன்னொரு தலைமுறைக்கு அவமானப்படுத்தப்படுகிறார்கள். இப்படியாக பல்லாயிரம் பெண்கள் அவதிப்படும் போது நிலையற்ற வாழ்க்கையில் அவரும் அவர்தம் குடும்பமும் சுழலும் போது இந்தக் கொண்டாட்டங்கள் அவசியம்தானா?

தினசரி வாழ்க்கையில் பெரும்பாலான வீடுகளில் தங்கள் மனைவியின் உடல்நல முடிவுகளைக்கூட ஆண்களே எடுக்கின்றனர். தெற்காசிய நாடுகளில் 61% ஆண்கள் முடிவின் படிதான் குடும்பத்தாரின் உடல்நல சிகிச்சைகள் கூட தெரிவு செய்யப்படுகின்றன. அதே போல அன்றாடம் நடக்கும் செலவினங்கள் தெற்காசிய நாட்டில் 34 இல் இருந்து 40% வரை ஆண்கள் முடிவெடுப்பின் படி நடக்கிறது.

இதே போல பெண்கள் கருவின் துவக்கம் முதல் கடைசி காலம் வரை ஏன் மயானத்திலும் கூட ஆண்களின் முடிவே அதிகாரம் பெற்றதாக இருக்கிறது.
ஆரம்ப நிலை படிப்பு முதல் பொது literacy வரை 100% ஆண்களுக்கு 65% பெண்களே படிக்கிறார்கள். பெண்களின் கல்வி அறிவு ஒரு குடும்பத்தின் உடல் நலம் மற்றும் அறிவுத்திறனுக்கு ஆதாரம் என்ற போதிலும் பெண்குழந்தைகளின் படிப்பு ஆண் குழந்தைகளை விட அதிகம் ஆதரவு பெறுவதில்லை. இவ்வாறாக ஓவ்வொரு துறையிலும், வேலைக்கு போகும் பெண்கள் பெறும் சற்றே visibility குறைந்த பிராஜக்ட், பொதுவாக குழந்தை வீடு என்று பெண்கள் கவனம் செலுத்த தேவை இருப்பதால் அவர்களால் நீண்ட நேரம் பணியாற்ற முடியாது என்று அனுமானித்து வேறு திட்டங்கள் கொடுப்பது, வீட்டின் அன்றாட வேலைகளில் கூட இது பெண்களே செய்ய வேண்டியது என்று அவர்கள் செய்யும் intangible பணிகளின் முக்கியத்துவத்தை கவனிக்காமல் விடுவது போல நிறைய எழுதிக்கொண்டே இருக்கலாம்.

நேற்றைய முந்தினம் நடந்த ஒரு அரசியல் தலைவர்கள் நிறைந்த கூட்டத்தில் சிறையில் பெண்கள் எப்படி கொடுமைப்படுத்தப்படுகிறார்கள் என்ற ஒரு விளக்கப்படத்தையும் பார்க்க நேரிட்டது. சிறையில் அதிலும் ஆப்பிரிக்க அமெரிக்க பெண்ணாகவோ ஹிஸ்பானிய பெண்ணாகவோ இருந்தால் இன்னும் எத்தனை மோசமாக நடத்தப்படுகிறார்கள் என்பதையும் பார்க்க நேர்ந்தது. அவர்களுக்காக போராடும் ஒரு குழு நடத்திய உரை மூலமாக மனமே கனத்துப் போனது. இதில் இன்னும் வேதனையான செய்தி என்னவென்றால், குடியுரிமை இல்லாமல் வரும் மக்கள் இமிக்ரேஷனால் பிடிக்கப்படும் போது, அதில் பெண்கள், குழந்தைகள் சிறையில் (பொதுவான குற்றவாளிகளுக்கான) கிரிமினல் குற்றவாளிகள் போல நடத்தப்படுவதும் ஆண்கள் இமிக்ரேஷன் சிறையில் அடைக்கப்படுவதும்தான். கிரிமினல் சிறையில் நிகழ்த்தப்படும் அராஜகங்கள் நிர்பந்திக்கபட்டு ஒரு கிரிமினல் குற்றவாளியைப்போல பெண்கள் நடத்தப்படுவது ஏன் என்று இன்னொரு குழு அட்டைகளை பிடித்திருந்தார்கள். ஒரே செய்கைக்கு ஆணுக்கொரு நீதியாகவும் பெண்ணுக்கொரு நீதியாகவும் இருப்பது இங்கேதான். குடியுரிமை பெறாமல் வேலை செய்யும் பெண்கள் அடையும் கொடுமைகளும் அதிகம்.

ஓரின சேர்க்கையாளர்களில் பெண்கள் நடத்தப்படும் விதம், மருத்துவர்கள் அவர்களை நடத்தும் விதம் குறித்தும் கூட நிறைய எழுதி மனம் அமைதி இழக்கலாம். ஆனாலும் இந்த பதிவு அதற்காக இல்லை.

14% ஆனாலும் கூட பல நாடுகளில் பெண்கள் பாராளுமன்றத்தில் இருக்கிறார்கள், அவர்களால் முடிவுகள் எடுக்க மாற்ற முடியும், 65% ஆனாலும் கூட படிக்க செல்லும் பெண்கள் சதவிகிதம் அதிகமாகிக்கொண்டு இருக்கிறது. 19 % பெண்கள் வன்முறைக்கு ஆளானாலும் 81% பெண்கள் தங்களைக்காத்துக்கொள்ளும் கலையை அறிந்திருக்கிறார்கள். 35% ஆனாலும் கூட உலகெங்கும் ஆண்கள் பாலியியல் சமன்பாட்டை மதிக்க துவங்கி இருக்கிறார்கள். ஆக கூடி கோப்பை நிறைய ஆரம்பித்திருக்கிறது. அது முற்றிலும் நிறைய என்ன செய்ய வேண்டும் என்று யோசிக்க துவங்க வேண்டும்.

இதுதான் சோசியல் நார்ம் தியரி சொல்லித் தரும் பாடம். பாதிக்கோப்பை நிறைந்த நிலையில் மீதியை நிரப்ப ஒன்று சேருங்கள் என்பதன் தத்துவம். இப்போதுதான் நிறைய துவங்கி இருக்கும் கோப்பையில் நச்சை சேர்ப்பது போல பொறுப்பற்ற தன்மையில் நடப்பதும் பேசுவதும் கூடாது என்பதையும் தங்களை காப்பாற்ற வந்திருக்கும் சட்டங்களை மதித்து அதையும் கவனமாக கையாள்வதையும் பெண்கள் கற்றுக்கொள்ள வேண்டும்.

பாலியியல் சமன்பாடு என்னும் கனவு நிறைவேற இன்னும் பல தூரம் செல்ல வேண்டும் என்றாலும், பாதையே இல்லாமல் இருந்து முட்காடாக இருந்த நிலத்தில் இப்போது பாதை ஒன்று புலப்படுவதே கூட நல்ல மாற்றம்தான். நடைப்பயணத்தில் இன்னும் நிறைய பேர் சேர்ந்து கொள்ள முடியும், சேர்ந்து கொள்வார்கள் என்னும் நம்பிக்கை பூத்திருக்கிறது.

ஒரு சிறுமியின் சுதந்திரத்தை தேடிய கதையை இங்கே கேளுங்கள்.

பாலியியல் சமன்பாட்டின் முக்கியத்துவத்தைச் சொல்லும் புகைப்படங்களின் தொகுப்பு இங்கே

Un and UNESCO reports linked wherever needed. You can download them.

»  Uses: WordPress   »  Ahren Ahimsa   »  Redesign & Maintained by Oviam Solutions