»
S
I
D
E
B
A
R
«
மண(ன) முறிவும் மற்றையவும்- 3
Jul 6th, 2007 by பத்மா அர்விந்த்

விவாகரத்து வழக்குகள் பல காலம் மன உளைச்சலை தரக்கூடியன, புதிது புதிதாய் வரும் குழப்பங்கள், குழந்தையை யார் பொறுப்பாக பார்த்து கொள்வது, எப்படி சேமிப்பு, கடன் இவற்றை பகிர்ந்து கொள்வது என்ற காரணங்கள், மனைவி மீதோ அல்லது கணவன் மீதோ வெறுப்பு இருந்தாலும் மனதுக்கு பிடித்த மற்ற உறவுகளை எப்படி பிரிவது, குழந்தைகளுக்கும் தாத்தா பாட்டி உறவின் தொடர்பை எப்படி வரையறுப்பது என்ற எல்லா கேள்விகளும் வரும். கடைசியாக வந்த புள்ளியியல்(அமெரிக்க மத்திய அரசின் புள்ளீயியல் கணக்கு) படி ஒரு சிக்கல் இல்லாத விவாகரத்து வழக்கு முடிய 1 முதல் இரண்டு வருடங்கள் ஆகும்.

விவாகரத்துக்கு பிறகு 380,000 பெண்கள் தங்கள் முன்னாள் கணவர்களாலும், 52,000 ஆண்கள் தங்கள் முன்னாள் மனைவியராலும் கொடுமைக்கு ஆளாகிறார்கள். எந்த ஒரு விவாகரத்து வழக்கு முடிந்தபின்னும் ஆணோ பெண்னோ வருந்தாமல் இருந்ததில்லை. பெரும்பாலானவர்கள் தங்கள் முன்னாள் துணைமீது பழி சுமப்பதைவிட தன் மீதே அதிக தவறிருப்பதாகவும், இது தன்னுடைய தனிப்பட்ட தோல்வியாகவும் I am a looser என்ற மனப்பான்மையோடு வருந்துவதாகவும் உளவியலார்கள் சொல்கிறார்கள்.

விவாகரத்து மத, இன கட்டுப்பாடுகளாலும் வேறுபடுவதை இங்கே காணலாம்.

விவாகரத்து பொதுவாக மூவகைப்படும். 1. இரண்டு பேரும் மனம் ஒப்பி விவாகரத்து பெறுவது. இவ்வகையில் மீண்டும் இருவரும் சேர்ந்து வாழவும், மறுமணம் செய்துகொள்ளவும் முடியும். பொதுவாக மனம் ஒப்பி செய்துகொள்ளும் விவாகரத்துகள் குறைவு. அப்படியே செய்துகொண்டாலும் பொருளாதார காரணங்கள் அதை கட்டுப்படுதுகின்றன. இவ்வகை விவாகரத்துகளுக்கு ஏதேனும் அந்த மாநிலம் ஒப்புக்கொள்ள கூடிய காரணங்கள் இருந்தால் போதுமானது. இங்கே யார் மீது தவறு என்பதைவிட, இந்த திருமணம் ரத்தாக வேண்டும் என்பதே நோக்கம்.

சில முக்கிய காரணங்கள்: இருவரும் சேர்ந்து வாழ்வதில்லை (கணவன், மனைவி வேறு ஊர்களில் வசிப்பது), தவிர்க்க முடியாத பிரச்சினைகள், தீர்த்துவைக்க முடியாத மன வருத்தங்கல் போன்றவை காரணமாகும். இவ்வகை விவாகரத்துகள் பெற்றுக்கொள்ள இருவரும் சில காலம் தனித்து வாழவேண்டும். இது மாநிலங்களிடையே வேறுபடும். நியுஜெர்சியில் 18 மாதங்கள் பிரிந்து வாழ வேண்டும். ஏதேனும் மனம் ஒப்புகொள்ள கூடிய காரணம் வேண்டும். உதாரணமாக முன்பொருமுறை வலையில் பதிந்திருந்த வழக்கொன்றில், பெண் விவாகரத்து கோரியதன் முக்கிய காரணம், மாமானாரின் அத்துமீறல்கள். ஆனால் அது எங்கேயும் வழக்காக பதிந்திருக்கவில்லை, எனவே அதை விவாகரத்துக்கான காரணமாக ஏற்றுக்கொள்ள முடியாது என்று இரண்டு வழக்கறிஞர்களும் சொன்னபின், கணவனின் வன்முறையை காரணம் காட்ட விரும்பினாள். ஆனால், அதைக் கணவன் ஒப்புக்கொள்ளவில்லை. தான் வன்முறையோடு ஒரு பெண்ணை நடத்தியதாக நிரூபணம் இல்லாமல் ஒரு சட்ட ஆவணத்தில் போடுவதை ஆண் ஒப்புக்கொள்ளவில்லை. பெண்ணுக்கு/ ஆணுக்கு திருமணத்தை மீறிய உறவிருப்பதாக எங்கேயும் சொல்லவில்லை. கடைசியாக இருவரும் ஒப்புக்கொண்ட ஒரு காரணம், குழந்தைகளை வளர்க்கும் முறையில் பேதம் இருப்பதாக. இந்த காரணமே அவர்களின் விவாகரத்துக்கு முக்கிய காரணமாக சொல்லப்பட்டது. குடும்ப நல நீதிமன்றங்களுக்கு சென்றால், வெளியே அன்ரு ரத்து செய்யப்பட்ட திருமணங்களும் அவற்றீற்கான காரணங்களும் கொடுக்கப்பட்டிருக்கும். சின்ன சின்ன காரணங்கள் விவாகரத்துக்கு ஆதாரமாக சொல்லப்படுவது இது போல, எப்படியாவது அதிக பாதிப்பு இல்லாமல் திருமண ஒப்பந்தம் ரத்தானால் சரி என்று ஏற்றுக்கொள்ளப்படுபவையே ஆகும்.

இவ்வகை விவாகரத்துகள் வழக்கில் ஈடுபடும் வழக்கறிஞர்களும் எப்படியாவது வழக்கு முடிந்தால் சரி என்று இருவரையும் அழைத்து நிபந்தனைகள், யார் குழந்தையை பார்த்துக்கொள்வது போன்ற விவகாரங்களை கூடுமானவரை தீர்க்க முயலுகிறார்கள்.

சில மாநிலங்களில் பிரிந்திருக்கும் காலம் கூடுதலாக இருக்குமேயானால், கணவனும் மனைவியும் பேசி எப்படியாவது ஒரு தவறு இருப்பதாக சொல்லி குற்றமுள்ள விவாகரத்துக்கு ஏற்பாடு செய்துகொள்கிறார்கள். இதிலும் உண்மையில்லை. இவ்வகை colludingம் சாத்தியமே. குழந்தைகளின் பொறுப்பை பெற பெற்றோர்கள் செய்யும் முயற்சிகள் இன்னும் வியப்பை தரவல்லன. இதில் குழந்தைகளை கருவியாக , பணயமாக, பொருளாக பயன்படுத்துவது அதிர்ச்சியை தரும். அதைப்பற்றி விரிவாக பிறகு. வயதுவந்த குழந்தைகள் பெற்றோரை பயன்படுத்துவதும் உண்டு.

உறவில் விரிசல் வந்தபின் குழந்தைகளுக்கு வழக்குகள், மன வருத்தங்கள் இன்னும் அதிக துன்பத்தை தரலாம் என்பதை தடுக்க இவ்வழியும் கையாளப்படும். ஆனால் இதில் சில சமயம் ஒருவர் தடம் மாறி , இன்னொருவரே ஒப்பு கொண்டுவிட்டார், ஆகவே நான் எந்த சலுகையும் தரமுடியாது என்று சொல்லவும் வழி இருக்கிறது. இதில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.

மனம் உவந்து ஒப்புக்கொள்ளும் விவாகரத்தில் பலவகை ஒபந்தங்களும் பரிமாறிக்கொள்ளப்படும். வழக்கறிஞர்கல் இடைபட்டு பேசி, இவற்றை ஏற்பாடு செய்வார்.

சட்ட சிக்கல்கள், தவறுள்ள விவாகரத்து (at fault divorce), முடிவான விவாகரத்து (summary divorce)பற்றி அடுத்த பதிவில் பார்க்கலாம்

மண(ன) முறிவும் மற்றையவும் – 2
Jun 25th, 2007 by பத்மா அர்விந்த்

விவாகரத்துக்கான காரணங்களை அலசும் முன் திருமணங்கள் எப்படி நடக்கின்றன என்பதை பார்ப்போம். நம் ஊர் திருமணங்களைப் பற்றி முன்பே பல பதிவுகளாக எழுதிவிட்டபடியால், அமெரிக்க திருமணங்களைப் பற்றி ஒரு மேலோட்டம். லாஸ்வேகாஸ் திருமணங்கள், ஹாலிவுட் திருமணங்கள் இதில் சேர்த்தி இல்லை.

நம் ஊரில் மட்டும் இல்லை இங்கேயும் திருமணம் நிறைய திட்டமிட்டே பல எதிர்பார்ப்புகளோடு நிகழ்கிறது. வாழ்நாளில் சேமித்த உழைப்பு செலவிடப்பட்டும் மிக விமரிசையாக அரங்கேறுகிறது. பெண் வீட்டினரே பெரும்பாலான செலவைச் செய்கிறார்கள், தேனிலவுக்கான பயணம் உள்பட. திருமணத்திற்கு முதல் நாள் மாலை நடக்கும் ரிகர்சல் ஒத்திகைத் திருமணச் செலவை சில சமயம் பிள்ளை வீட்டார் ஏற்பதுண்டு. மற்றபடி மேசைகளில் வைக்கும் சின்ன சின்ன பரிசுப்பொருள் (நாம் வைத்துக்கொடுப்பது போல) முதல் மணமகனும் மணமகளும் திட்டமிட்டு நல்ல முறையில் நடக்க வேண்டுமே என்று கவலைப்பட்டு யார் மனமும் புண்படாமல் ஒரு மணமகள் தோழன், தோழியை தேர்ந்தெடுத்து அப்பாவின் இரண்டாம் மனைவியை அழைத்தால் அம்மா மனம் வருந்துவாரா என்றெல்லாம் கவலைப்பட்டு நடத்தி எந்த பயனும் இல்லாத, மிக மேலோட்டமான ரத்து செய்வார்களா? சற்றே சிந்தித்துப்பாருங்கள்.இந்தக் காரணங்கள் எப்படி வருகின்றன என்பதை விவாகரத்து வழக்குகளின் அடிப்படையைப் பார்க்கும் போது காணலாம்.

என் அலுவலக சக ஊழியர் பெண் சமீபத்தில் திருமணம் நிச்சயமானது. நிச்சயதார்த்த விழாவிற்கே நிறைய செலவாகிவிட்ட படியால், இப்போது திருமணத்திற்காக பொருள் சேர்க்க பகுதி நேர வேலையும் பார்க்க ஆரம்பித்திருக்கிறார். மகளுக்கு திருமணம் நிச்சயம் ஆன மகிழ்ச்சி, மணமகன் நல்லவனாக இருக்க வேண்டுமமென்ற கவலை,மணமகனை பற்றி தெரிந்தவர்களிடம் எல்லாம் விசாரிப்பது என்ற எந்த வகையிலும் நம் ஊர் தந்தைக்கு மாற்றானவர் இல்லை. இப்போதெல்லாம் பெண்களும் வேலைக்கு போய் பொருள் ஈட்டுவதால், தந்தையின் செலவிற்கு தானும் கொடுப்பதும், ஆண்களும் தேனிலவு போன்ற செல்வை பகிர்ந்து கொள்வதுமாய் மாற்றங்கள் நடந்து கொண்டுதான் இருக்கின்றன.

தனக்கு வாடகை கார் ஏற்பாடு செய்யவில்லை, பார்ட்டி ஃவெவர் எனப்படும் பரிசு சரியாக இல்லை (நான் கொடுத்த பரிசு 100$, அவர் திருப்பி தந்தது எங்கோ ஒரு டாலர் கடையில் இருந்து) என்பது போன்ற சண்டைகளும் உண்டு. முன்பெல்லாம் இங்கேயும் விவாகரத்துகள் அவ்வளாவாய் இல்லை என்பதை கீழ்க்காணும் ஒரு புள்ளியியல் இருந்து தெரிந்துகொள்ளலாம்.
Year Divorces per 1,000 population Year Divorces per 1000 population
1950 ……….. 2.6 1983 ……….. 5.0
1955 ……….. 2.3 1984 ……….. 5.0
1957 ……….. 2.2 1985 ……….. 5.0
1960 ……….. 2.2 1986 ……….. 4.9
1965 ……….. 2.5 1987 ……….. 4.8
1970 ……….. 3.5 1988 ……….. 4.8
1971 ……….. 3.7 1989 ……….. 4.7
1972 ……….. 4.0 1990 ……….. 4.7
1973 ……….. 4.3 1991 ……….. 4.7
1974 ……….. 4.6 1992 ……….. 4.8
1975 ……….. 4.8 1993 ……….. 4.6
1976 ……….. 5.0 1994 ……….. 4.6
1977 ……….. 5.0 1995 ……….. 4.4
1978 ……….. 5.1 1996 ……….. 4.3
1979 ……….. 5.3 1997 ……….. 4.3
1980 ……….. 5.2 1998 ………. 4.2
1981 ……….. 5.3 1999 ………. 4.1
1982 ……….. 5.1 2000 ………. 4.2
1983 ……….. 5.0 2001 ………. 4.0
சின்ன சின்ன கிராமங்களில் இன்னமும் எத்தனை மனசங்கடங்கள் இருந்தாலும், பாவம், சுவர்க்கம் கிடைக்காது என்றும், குழந்தைகளை பார்த்துக்கொள்ள வேண்டுமமென்பதாலும் பயந்து சேர்ந்து வாழ்பவர்கள் உண்டு. ஒரு அரசாங்க வழக்கறிஞர் தன் துணைவியிடம் மிகவும் கொடூரமாக நடந்து கொள்வார். வாயில் துப்பாக்கியை வைத்து கொன்றுவிடுவேன் என்றெல்லாம் பயமுறுத்துவது வழக்கம். சாப்பாடு ஆறிவிட்டால்கூட எலும்புகள் உடையுமாறு அடிப்பதும் உண்டு. ஆனாலும் அந்த பென் கணவனை எதிர்த்து புகாரிடவே முடியவில்லை. முதல்காரணம், எல்லா காவலருக்கும் கணவனை தெரியும், இரண்டாவதாக நல்ல பதவியில் உள்ள கணவனின் வார்த்தைகளுக்கு முன் அவளை நம்ப யாரும் தயாரில்லை, மூன்றாவதாக மற்ற நன்பர்கள் எல்லாரிடமும் மிகவும் நல்ல மனிதன், அன்பானவன் என்று கணவன் பெயரெடுத்திருந்ததும், நல்ல அதிகாரம் உள்ள பதவியில் இருந்ததும், பொது இடங்களில் மிகவும் அன்பாக நடத்தியதும் காரணம், கடைசியாக பல வருடங்களாக கணவன் சொன்ன குற்ற சாட்டுகளை நம்பி, கடைசியில் அந்த பெண்னே தன்னை பற்றி குறைவாக மதிப்பிட்டது. ஒருநாள் எதேச்சையாக வாய்க்குள் வைத்து மிரட்டிய துப்பாக்கி வெடித்து(தவறுதலாக ட்ரிகரை மிகவும் அதிகமாக அழுத்தி பயமுருத்தியது போல செய்யும் போது) இறந்து போனபின் குழந்தைகள் சொன்ன சம்பங்களை பார்த்து பலரும் அதிர்ந்து போனார்கள். அரசாங்க வழக்கறிஞர்கள், காவலர்கள் இவர்கள் மேல் வழக்கு பதிவதென்பது மிகவும் கடினம்.பொய் வழக்குகள் நிறைய வரும், சாலையில் போகும் போது மற்ற காவலரால் வேண்டும் என்றே சின்ன குற்றங்கள் பதிவாக்கப்படும், ட்ரங்கை திறக்க சொல்லி போதை பொருள் போட்டு வழக்கு பதியப்படும் அபாயங்கள் நிறைய உண்டு.

விவாகரத்தில் நிறைய வகைகள் உண்டு. At fault, no fault என்ற இரண்டு பெரிய பிரிவுகள் உண்டு. இரண்டு பேரும் மனம் ஒன்றி விவாகரத்து கோரினாலும் நியுஜெர்ஸியில் 18 மாதங்கள் பிரிந்து இருக்க வேண்டும். இந்த வகைகளைப் பற்றி விரிவாக அடுத்த பதிவில்.

மண(ன) முறிவும் மற்றையவும்- 1
Jun 23rd, 2007 by பத்மா அர்விந்த்

கொத்தானாரின் நட்சத்திர வாரத்தில் சில மணமுறிவுகள், குழந்தைகளுக்கான உதவிப்பணம் மற்றும் ஜீவானம்சம் அல்லது alimony பற்றி சில கேள்விகளை முன்வைத்திருந்தார். மிக சரியான அந்த கேள்விகளுக்கு என்னால் இயன்ற வரை நான் பார்த்த சில விவாகரத்துகள் அதன் வழக்கு விவாதங்கள் சில சட்டங்கள், அவற்றை மீற ஏமாற்ற செய்யப்படும் சில ஜாலங்கள், கிடைக்கும் உதவிப்பணத்தை அபயோகிக்கும் பெண்கள்/ஆண்கள், புத்திசாலித்தனமாக சிக்கி சுழலும் வழக்குகள், முடிந்தால் போதும் என்று ஏற்றுக்கொள்ளப்படும் பொய்யான காரணங்கள் எழுத துவங்கியதன் ஆரம்ப பதிவு இது.

இந்த பதிவு கூடுமானவரை பால் சார்ந்தோ அல்லது இனம் சார்ந்தோ இருக்காது என்று நம்புகிறேன். இங்கே மதங்களின் (எல்லா) கட்டுப்பாட்டையும் சமுதாயத்தின் சில கட்டுப்பாடுகள் எழுதப்படாத ஆனால் பரவலாக ஏற்றுக்கொள்ளப்படும்/பட்ட விதிகளையும் கோடிட்டு காட்ட எண்ணம்.

புள்ளி விவரங்களும் பட்டியலிடப்படும் ஆங்காங்கே, சில வழக்குகளும் சம்பந்தப்பட்டவர்களின் அனுமதி பெற்று பெயர் மாற்றத்தோடு வரும். மாற்று கருத்துகள் இருந்தால் தெளிவாக சொல்லுங்கள்.

உரிமை எது, எதுவரை தலையிடலாம், எது வரையறை மீறுவது என்றெல்லாம் பல குழப்பங்கள் உண்டு. மனைவி அல்லது கணவனின் விருப்பத்திற்கு குறுக்கிடாமல் இருக்க வேண்டும் என்று சிலர் அதிக அக்கறையும் கவனமும் எடுத்துக் கொள்ள அது பாராமுகமாய், விருப்பம் இல்லாததாகவும் கருதப்பட்டு மனப்புழுக்கம் அதிகரித்து முறிவுக்கு காரணமாகிறது.

நியுக்கிளியர் குடும்பத்துக்கும் அன்னை, தந்தை என்ற நெருங்கிய உறவு வட்டத்தின் எல்லைகளும் சரியாக வரையறுக்க படாமல் அன்பென்ற வடிவில், இத்தனை கஷ்டப்பட்டு வளர்த்தேனே இப்போது இதை செய்யக்கூடாதா என்ற பயமுறுத்தல் வடிவில், கணவன் மனைவி உறவு வட்டத்து முக்கியத்துவ போட்டியில், குழந்தை பராமரிப்பில் என்று எல்லாவற்றிலும் குழப்பம் வருகிறது.

மனைவிக்கு ஓய்வு தர தான் வீட்டில் இருக்கும் போதெல்லாம், குழந்தையை தானே கவனித்துக்கொண்ட கணவன் மீதுகூட, நான் குழந்தை வளர்ப்ப்பது பிடிக்கவில்லை என்று குற்றம் சாட்டும் மனைவியரும், இப்பவே குழந்தையை உன்னிடமிருந்து பிரித்துவிடப்போகிறார்கள், கவனமாய் இரு என்று சொல்லித்தரும் அன்னையரும் உண்டு. இந்தியாவில் மட்டும் என்றில்லை, அமெரிக்காவிலும் கூட கணவன், மனைவி இவர்களின் பெற்றோர், உடன் பிறந்தோரால் பிரச்சினைகல் விவாகரத்துவரை போகிறது.

இந்த குழப்பங்கள் எல்லாம் வருவதன் காரணமே சரியான உரையாடல் (communication) இல்லாததும் எது எல்லைக்கோடு என்று தெரியாததும் ஆகும்.

காதலிக்கும் போது ஒருவரை ஒருவர் மகிழ்விக்க அல்லது நல்ல நினைவை impression ஏற்படுத்த பிடிக்காத விஷ்யங்களில் கூட பொருமை காப்பவர்களும், கிடைக்கிற சிரிது காலத்தில் மகிழ்ச்சியுடன் இருப்போமே என்று ஒத்தி போடுபர்களும் திருமணம் என்று ஆனபின் தனக்கு தெரியாத இன்னொரு பிம்பத்தை, வடிவத்தை கண்டு தடுமாறுவதும், அலுவக நேரம் தவிர மற்ற நேரங்களில் கூடவே இருக்கும் போது சின்ன விஷயங்களில் கூட இருக்கும் வேறுபாடு மனநிலை பொருத்து தரும் சினம், ஏமாற்ரமும், இப்போது கணவன் மனைவியோடு கூடவே வரும் உறவினர் என்ற பொருப்பும் அவரவர் குனத்திற்கு ஏற்று. அல்லது சகித்துக்கொள்ள வேண்டிய நிர்பந்தமும் வரும் போது, எல்லாம் குழப்பமாகிறது. திருமணமாகும் போது தன்னிச்சியாய் இருந்துவிட்டு, இப்போது இன்னொருவரின் ரசனை விருப்பம், குடும்பம் என்ற அமைப்பின் தேவைகள் சில தனி வட்டத்தை குறுக்குவதால், கணவனோ மனைவியோ அன்பென்ற பிடியில் அவரவர் individual space ஐ compromise செய்துகொள்வது அல்லது இழக்கும் போது இன்னும் அதிகமாக மூச்சு முட்டுகிறது.
இதை எல்லாம் மீறி வன்முறை அதிகமாகும் போது ஆணோ பெண்ணோ கலங்கி பொய்விடுகிறார்கள். நியுஜெர்ஸியில், அலுவகத்தில் மற்றூம் நண்பர்களிடத்தில் மிகவும் பொறுமைசாலி என்ற பெயர் எடுத்த ஒருவர், மனைவியை கோபத்தில் மிக பலமாக அடித்திருக்கிறார் மருத்துவமனையில் சேர்க்கும்படி. காவலர்கள் விசாரித்தவகையில் இது அடிக்கடி நிகழும் ஒன்று என்பதும் தெரியவர, மனைவியையும் குழந்தைகளையும் சட்டரீதியாக பிரித்து பாதுகாப்பும் கொடுக்கப்பட்டது. விவாகரத்து ஆனாலும், கணவனோ அல்லது மனைவியோ போதை பொருளுக்கு அடிமை போன்ற மிக பெரிய குற்றம் இல்லாதவரை குழந்தைகளுக்கு பெற்றோர் இருவரில் ஒருவர் முதன்மை காவலராகவும் மற்றொருவருக்கு வாரம் இருமுறை கவனித்துக்கொள்ளூம் visitation உரிமையும் உண்டு. என்னதான் கணவன் மீதோ அல்லது மனைவி மீதோ வெறு இருந்தாலும் சட்டப்படி ஒரு தந்தைக்கு அல்லது அன்னைக்கு இருக்கும் உரிமையை குழந்தை 18 வயதாகும் வரை யாராலும் தடுக்க முடியாது. அப்படி தன் குழந்தைகளை அழைத்து போன தந்தை அவர்கள் இருவரையும் கொன்று தானும் தர்கொலை செய்துகொண்டார். அவரது நண்பர்களால் இதை நம்பவே முடியவில்லை. நம்மிடம் சாதாரணமாக மிக நல்ல முறையில் பழகும் ஒருவர் கூட தன் துணவர் அல்லது துணைவியிடம் மிகவும் கட்டுப்பாடு அல்லது அடக்குமுறையுடன் நடந்து கொள்ள முடியும்.

இதற்கு பொருளாதார சார்பு நிலை மட்டும் அல்லாமல் இன்னும் பல காரணங்களை உளவியலார் சொல்லி இருக்கின்றனர். அமெரிக்க சட்டங்களும் மாநிலத்துக்கு மாநிலம் வேறுபடும். நான் எழுதுவது பெரும்பாலும் நியுஜெர்சி மாநில சட்டத்தை ஒட்டி இருக்கும். இது ஒரு முன்னுரை மட்டுமே.

»  Uses: WordPress   »  Ahren Ahimsa   »  Redesign & Maintained by Oviam Solutions