»
S
I
D
E
B
A
R
«
உடல் நலத்தை மாற்றும் செய்முறைகளின் அடிப்படை மாதிரி (Health belief Model – HBM)
Sep 13th, 2006 by பத்மா அர்விந்த்

கிட்டதட்ட 50 வருடங்களாக பழக்கத்திலிருக்கும் HBM இன்று பெரும்பாலான மனநல மருத்துவர்கள் மற்றும் உடல் நலம் பற்றி சொல்லித்தரும் ஆர்வலர்களால் பயன் படுத்தப்படுகிறது. இதன் நல்லதும் அல்லதும் ஆராய்ச்சிக்கு உட்படுத்தப்பட்டு இப்போது ஒரு நல்ல முன் மாதிரியாக செயல்படுகிறது.

1950 இல் உளவியல் வல்லுனர்களால் இந்த செயல் முறையும் திட்டமும் முதன் முதலில் தோற்றுவிக்கப்பட்டது.மக்கள் நோயை தடுக்க வரும் திட்டங்களில் ஏன் அதிக அளவில் பங்கு பெற வரவில்லை என்பதை ஆராய மேற்கொண்ட முயற்சியின் விளைவே இந்த கருத்தும் மாதிரியும்.

உளவியல் வல்லுனர்கள் முதலில் மனிதனுக்கு புதிய ஒரு தொழில் நுட்பம் பற்றி அறியாமையால் ஏற்படும் ஒருவித தயக்கமே மருத்துவ துறையின் புதிய பரிசோதனைகளுக்கு உள்ளாவதை தடுக்கிறது என்று கூறினர். இது இன்னமும் உண்மையாகும். ஒரு கருவி வாங்கும் முன் அதன் பலன்கள், உபயோகிக்க எளிதானதா, அதிக நாட்கள் வருமா, நம்மால் உபயோகிக்க முடியுமா, கொடுத்த பணத்திற்கு ஈடானதா என்றெல்லாம் நாம் மன தினுள்ளேயே ஆராய்வதும், பின் அதிக அளவில் பயன் படுதிய பின் மற்றவருக்கு சொல்வதை போல, உடல் நல பழக்கங்களிலும் தயக்கம் ஏற்பட அறியாமையே காரணம் என்கிறார் வாட்சன் மற்றும் ஹில்ல.

இதையே இன்னும் ஒருபடி மேலே போய், ஒரு பழக்கத்தால் வரும் நன்மைகளை எடுத்து சொன்னால், கற்றுக் கொள்ள இருக்கும் ஆரம்ப பயம் போய்விடும், மக்கள் இன்னமும் அதிக ஆர்வத்துடன் கற்று கொள்வார்கள் என்று தொடர்ந்து ஆராய்ச்சி செய்த உளவியல் வல்லுனர்கள் கூறினர். மார்பக புற்றுநோய் வரும் அறிகுறி தெரியும் முன்னே நிழல்படம் எடுத்துக்கொண்டோமானால் (Mammography), புற்று நோய் வருவதை தவிர்க்க முடியும் என்பது விளங்கினால், புற்று நோய் வந்தால் அனுபவிக்கக்கூடிய துன்பங்களை ஒற்று நோக்கில், நிழற்படம் எடுக்கும் போது தெரியும் வலியும் துன்பமும் மிக குறைவு என்பதும் புரிந்தால் பெருவாரியான பெண்கள் தங்களை இப்பரிசோதனைக்கு உட்படுத்திக் கொள்வர்.

இதைத்தான் HBM சொல்கிறது. இது அடிப்படையில் பலன்களை எதிர்பார்த்து செயல் புரியும் மனித மனத்தின் விருப்பத்தை அடிப்படையாக கொண்டது.

1. உடல் நலக்குறைவு ஏற்படாதிருத்தல் (பலன்)

2. ஒரு பழக்கம் இந்த நோய் வராமல் பாதுகாக்கும் என்ற நம்பிக்கை (எதிர்பார்ப்பு) ஆரம்ப காலத்தில் மக்களை நோய் தடுக்க நிழல் படம் எடுக்க ஊக்கம் தர பயன் பட்ட இந்த நிலைப்பாட்டை, காலப்போக்கில் நோய்வாய்ப்படும் போதான பழக்கங்கள், திருந்துகின்ற முறைகள், குழந்தைகள் மற்றும் பெரியவர்களை ஊக்கப்படுத்த, அலுவலகத்தில் வேலை செய்வோரை மேலும் உற்சாகப்படுத்த என்று எண்ணற்ற முறைகளில் பயன் படுத்த துவங்கியிருக்கிறார்கள்.

இந்நிலைப்பாடு 6 படிகளை கொண்டது.

1. மனதில் தோன்றும் எண்ணங்கள்: ஒரு மனிதன் தனக்கு நோய் வருமோ என்று மனதில் நினைப்பது. உதாரணமாக நல்ல உடல் நலத்துடன் இருக்கும் ஒருவன் தொலைக்காட்சியில் வரும் விளம்பரங்களை பார்த்துவிட்டு அது போல தனக்கும் உடல் நலம் குன்றுமோ என்று எண்ணுவது. ஒருவனுக்கு நுரையீரலில் புற்றுநோய் வருவதாக பார்த்துவிட்டு , தானும் புகை பிடிப்பதால் தனக்கும் வருமோ என்று எண்ணி பயப்படுவது. விளம்பரத்தின் உத்தியே புகை பிடிப்பவர்களை பயமுறுத்தி அவர்களை அப்பழக்கத்தை விட்டுவிட தூண்டுவதுதான். மருத்துவரிடம் சென்று பரிசோதித்து கொள்வது, தன்னுடைய உடல் நலத்தை மீண்டும் ஒருமுறை நிரூபித்துக்கொள்ளுதல் போன்ற செயல்களில் இந்த சலனம் ஈடுபடுத்தும்.

2. நோயின் தீவிரம் குறித்தான எண்ணங்கள்: ஆரம்ப நிலையில் அடிக்கடி இருமலோ, காய்ச்சலோ வருமாயின், மருத்துவர் மிகவும் ஆபத்தாக எதுவும் இல்லை என்று சொன்னாலும் மனம் நிம்மதியாய் இராமல், இணையத்தில் நோய் பற்றிய குறிப்புகளை படிக்கவோ, அல்லது புகைப்பதால் வரும் தீமைகளை பற்றி தெரிந்து கொள்ளவோ தூண்டும். இது நோயின் தீவிரத்தை பற்றிய கருத்துக்களை மனதில் தோற்றுவிக்கும். தன க்கு நோய் வந்து இறந்து விட்டால் தன் குழந்தைகள், மனைவி எப்படி துன்பப்படுவார்கள் என்றெல்லாம் அச்சப்பட ஆரம்பிக்கும் போது நோயின் தீவரம் குறித்தான எண்ணங்கள் ஒருவித அச்சுறுத்தலாக மாறும்.

3. நன்மைகளை குறித்து மனதில் தோன்றும் எண்ணம்: இப்போது பழக்கத்தை மாற்றிக்கொள்ள வேண்டும் என்று தோன்றினாலும் அதை மாற்றுவதால் வரக்கூடிய நன்மைகளை மனம் எண்ணிப்பார்க்க ஆரம்பிக்கிறது. நன்மை தீமைகளை கணக்கிடவும் செய்கிறது. புகைப்பதை விட வேண்டும் என்றால் தனக்கு மன உறுதி உண்டா, இதனால் ஒருவித தகைவு ஏற்பட்டு வீட்டில் அல்லது அலுவலகத்தில் எரிச்சலைடைந்து என்னுடைய உறவில் குழப்பம் வருமா, அதிகம் உண்ணத்தோன்றுமா, இதனால் அதிகம் செலவாகுமா, எடை கூடுமா, அந்த நேரத்தில் என்ன செய்யலாம், சிந்திக்கின்றபோது, உணவு உண்டபின் கையில் சிகரெட் வைத்துக் கொண்டு பழக்கமாகி விட்டதே, இப்போது என்ன செய்யலாம் போன்ற பலவும் சிந்தனையில் தோன்றும்.

4. தடங்கல்களாக மனதில் தோன்றுபவை: இங்கே தன்னுடைய பழக்கத்தை மாற்ற ஆகும் செலவு, வேறு பொழுதுபோக்கு வேண்டுமென்றால் அதற்கான நேரம், உடல் நலத்தின் நன்மைகளை மனதில் கொண்டு செய்யவேண்டிய சில செய்கைகள் என்று மனம் எண்ணினாலும் சில தடைகள் இருக்கத்தான் செய்கின்றன. உதாரணமாக இத்தனை நாள் நண்பர்களுடன் அலுவலகத்தி புகை பிடித்து மற்ற விஷயங்களை அலசிக் கொண்டிருந்து விட்டு மறுநால் அதே நண்பர்கள் அழைக்கும் போது உறுதி இன்மை, வேதி பொருள்கள் உடலில் தோற்றுவிக்கும் சலனங்கள், மனதில் தோன்றும் குழப்பங்கள் போன்றவை தடங்கல்களாக இருக்கும்.

5. செயல்பட வேண்டிய குறிப்புகள் (cues to Action): பழக்கத்தை மாற்ற வேண்டிய சில குறிப்புகளை அறிந்து கொள்ளுதல், புகைப்பதை நிறுத்தும் போது எப்படி இருக்கும் என்ன தோன்றும் போன்ற சில முன்னெச்சரிக்கைகள், ஏற்கென வே நிறுத்தியவர்கள் என்ன முறையை கையாண்டார்கள் போன்ற அனுபவ குறிப்புகள் உதவும். இங்கே ஊடகங்களும் ஒருவகையில் மக்களுக்கு தேவையான குறிப்புகளை தருகின்றன.

6. தன்னம்பிக்கையும் தன்னால் முடியும் என்ற சுய எண்ணமும்: தன்னால் முடியுமா என்ற அவநம்பிக்கை வரும் போதெல்லாம் ஊக்குவிக்கவும் உதவி செய்யவௌம் நண்பர்கள் துணை அவசிய வேண்டும். புகை பிடிப்பதை ஒரு வாரம் நிறுத்திவிட்டு மீண்டும் நிறைய பேர் உடனே துவக்குவதற்கு வேதிபொருட்களின் தூண்டுதலுக்கு பழகிய மனம் அதிலிருந்து விடுபட மறுப்பதுதான்.

குழந்தைகளுக்கு அறிவுரை கூறும் வழிமுறைகள்
Sep 5th, 2006 by பத்மா அர்விந்த்

குழந்தைகள் இரண்டு வயது முதற்கொண்டு நாம் சொல்வதை புரிந்து கொள்ளவும் சிந்திக்கவும் ஆரம்பிக்கிறது. அழுகின்ற போதெல்லாம் அம்மாவின் கவனிப்பு கிடைக்கும் என தெரிந்தால் கீழே விட்டவுடனே அழும். அழட்டும் என்று சில நிமிடங்கள் விட்டு விட்டால், அழுகையை நிறுத்திவிட்டு தான்பாட்டுக்கு விளையாட ஆரம்பித்துவிடும். அதேபோல குழந்தைக் காப்பகங்களில் விடும் போது அழும் குழந்தை நீங்கள் நகர்ந்ததும் விளையாடி மகிழ்ச்சி அடையும்.

குழந்தைகளுக்கு புரியும் வண்ணம் நேரடியாக பலன்களை சொல்ல வேண்டும். உதாரணமாய் வேலை செய்ய விடாமல் தொணதொணக்கும் குழந்தையிடம், அம்மா வேலை முடிக்கும்வரை அமைதியாய் இருந்தால் நாம் இருவரும் 1 மணி விளையாடலாம். இப்படி பண்ணினால் வேலையும் முடியாது, விளையாடவும் முடியாது என்று சொல்லி பாருங்கள். இரண்டு குழந்தைகள் இருக்கும் போது, எல்லா அன்பும் தனது தம்பி/தங்கைக்கே கிடைக்கிறது என்று உணரும் குழந்தை, தனது தம்பியை தொல்லை படுத்த ஆரம்பிக்கிறான்/ள். அப்போது தொடாதே என்று நீங்கள் கூறினால் அது நேர்மறையான வினையை துவக்குகிறது. கடிந்து கொண்டாலும் கவனிப்பு கிடைப்பதால் அதை மேலும் மேலும் செய்ய, உங்கள் கோபம் அதிகமாகி அடித்து வருத்தத்தை விளைவிக்கிறீர்கள். இதற்கு மாறாக, தங்கை/தம்பி பிறக்கும் முன்னேயே மூத்த குழந்தையையும் ஈடுபடுத்தினால், அதன் பின்னும் துணைக்கு அழைத்து பேசினால் அன்பும் வளரும், மனமும் அமைதியுறும்.

பள்ளிக்கு செல்லும் குழந்தைகள் தானாகவே வீட்டு பாடம் செய்ய, நேரத்தில் கிளம்ப, முந்தைய இரவே எல்லாவற்றையும் எடுத்துவைத்துக் கொள்ளும் போது மனநிலையை பாதிக்காது என்பதை சொல்லி பழக்கப்படுத்த வேண்டும். சின்ன சின்ன கைவேலைகளும் செய்து பழக்க வேண்டும். தனது துணிமணிகளை மடித்து வைத்தல், தனது அறையை சுத்தம் செய்தல், சமையலறையை தூசி துடைத்தல் போன்று வயதுக்கு ஏற்ற வேலைகள்பெண், ஆண் என்று இருபாலாருக்கும் நாம் வேலை செய்யும் போது கூடவே செய்யச் சொன்னால் பின்னாளில் எந்த வேலையையும் செய்ய முடியும். தன்னைவிட சிறிய குழந்தைகளுக்கு உதவி செய்தல், பணிவாக இருத்தல், பெரியோரிடம் அன்புடன் இருத்தல் போன்றவை எந்த வயதுக்கும் ஏற்ற கல்வியே ஆகும்.

சமீபத்தில் என் சகோதரி வீட்டிற்கு சென்றிருந்தோம். அப்போது அவளுடைய 3 வயது மகன் திடீரென வந்து, mommy, I am upset, என்றவுடன் என்ன விஷயம் என்று விசாரித்து பார்த்ததில் இன்னொரு குழந்தை தன்னுடைய விளையாட்டு பொம்மையை மற்ற குழந்தைகளுடன் பகிர்ந்து கொள்ள மறுக்கிறான் என்றான். வயதென்னவோ 3தான். ஆனாலும் நினைத்தை கோர்வையாக, வருந்துகிறேன் என்பதையும் எதனால் வருந்துகிறேன் என்பதையும் சொல்ல அறிந்திருக்கிறது. இந்த பழக்கம் இல்லாமல் போனால், பின்னாளில் அலுவலகக் கோபத்தை அடுத்தவரிடம் காண்பிக்கும் பழக்கம் வரும். கோபம் கொள்வதில் தவறே இல்லை, அதை சரியாக சொல்லவும் செய்யவும் கற்றுத்தர வேண்டும். மனநிலை பயிற்சியாளர்கள் குழந்தைகள் வருந்தும் போது அதை ஒரு காகிதத்தில் எழுதவோ, படம் வரையவோ அல்லது க்ரேயானால் கிறுக்கவோ சொல்கிறார்கள். இது அவர்களுடைய மனநிலையை அறிய உதவும்.

இரண்டு வருடம் முன்பு என் மகனின் பள்ளியில் ஒரு சிறுவன் கையில் மீனுடன் இவனை துரத்த, மீன் வாசம் பிடிக்காத என் மகன் கத்திக்கொண்டே ஒடியிருக்கிறான். அவனின் பயம் ஒரு விளையாட்டாக மாற, அந்த சிறுவன் இன்னும் துரத்தியிருக்கிறான். பள்ளி கவுன்சிலர் இருவரையும் அழைத்து இதை எவ்வாறு தடுத்திருக்கலாம் என்பதை இருவரையும் யோசிக்க சொல்லியிருக்கிறார். என் மகன் அவனிடம் தெளிவாக மீன் எனக்கு பிடிக்காது, ஆகையால் எனக்கு வேண்டாம் என்று சொல்லியிருக்கலாம் என்று எழுதித்தர, அந்த மாணவன் தான் செய்தது தவறு, ஏன் தவறு என்பதையும், அடுத்தவரின் உணர்ச்சிகளை, விருப்பு வெறுப்புகளை புரிந்து கொள்ளல் வேண்டும் என்றும் உணர்ந்து எழுதித்தந்து மன்னிப்பு கேட்டுக்கொள்ள இருவரும் கைகுலுக்கி நண்பர்களாக பிரிந்தனர். இன்னமும் என் மகன் அதை சொல்வது உண்டு. சரி தவறு என்பதை நாமே சொல்வதைவிட, அவர்களை சிந்திக்க சொல்லி ஒரு காகிதத்தில் எழுதவும் சொல்லிப்பாருங்கள். பிறகு உங்கள் கருத்தை சொன்னால் மனதில் நன்கு படியும்.

திடீரென்று பேசாமல் அமைதியாகும் பதின்ம வயதினரை அவர்கள் உணர்வை மதிக்கவும் பழக வேண்டும். பள்ளியில் உள்ள சக வயதினருடன் ஏதேனும் மனத்தாங்கல்கள் வந்திருக்கலாம், இல்லையெனில் தன் தோற்றம் பற்றிய கருத்தும் கவலையும் வந்திருக்கலாம். பெற்றோரிடம் சொன்னால் தவறாக நினைப்பார்களோ என்ற ஏக்கத்தால் பேசாமல் இருக்கலாம். குழந்தைகள் சொல்வதை கவனமாககேட்பதே முதல் படியாகும். எங்கள் காலத்தில் என்று ஆரம்பித்து கதை சொல்லாமல் அவனுடைய உணர்வுகளை அறிந்து அதற்கேற்றார்போல அரவணைத்து நடக்க வேண்டும்.

சின்ன வயதில் மனதில் வரும் குழப்பமும், காயமும் பின்னாளில் பலத்த விளைவுகளை ஏற்படுத்தும். சக மாணவனுக்கு உடல் நிலை குறைவு என்றாலும் அளவுக்கு மீறி வருந்துகிற குழந்தைகள் உண்டு. பதின்ம வயதினருடன் வாழ்க்கையை மகிழ்ச்சியாய் கழிப்பதுபற்றி நிறைய கையேடுகள் உண்டு. (How to Enjoy Life with a Preadolescent HELP) என்ற கையேடில் பல அற்புதமான நடைமுறைக்கு உட்பட்ட கருத்துக்கள் உண்டு. இவை peer pressure போன்றவையை சமாளிக்கும் வழிகள் பற்றியும் சொல்கின்றன. குழந்தைகளை குழந்தைகளாகவே இருக்க விடுங்கள்.

அறிவுரைகள் சொல்லும் வழிகள்
Aug 28th, 2006 by பத்மா அர்விந்த்

சொல்லுதல் யாவர்க்கும் எ ளிய- அரியவாம்
சொல்லிய வண்ணம் செயல்

என்பது போல நாள் தோறும் நமக்கு கிடைக்கும் அறிவுரைகளுக்கு பஞ்சமே இல்லை. தொட்டதெற்கெல்லாம் வீட்டில், அலுவலகத்தில், நண்பர்களிடத்தில் என்று எல்லோரும் எல்லாவற்றிலும் தங்கள் கருத்தை, அறிவுரையைச் சொல்வதை நீங்கள் கூட அனுபவப்பட்டிருப்பீர்கள். பெரும்பாலான சமயம் நாம் பதின்ம வயதினரை போல நீ சொன்ன வார்த்தை காற்றோடு போயாச்சு என்பது போல நடந்து கொள்கிறோம். அதே அறிவுறை தொடர்ந்து வருமென்றால், ஒருவித கோபத்திற்கு உள்ளாகி மனத்தாங்கல்கள் வருகின்றன. இதற்கு மேலும் என் அறிவுரையை நீ கேட்காவிட்டால், உன்னுடன் பேசுவதில்லை என்பது போல கணவன் மனைவியிடத்து, பெற்றோர்கள் பிள்ளையிடத்து கட்டளைகள் போடும் இடத்தில் இது இன்னும் அடங்காத மனதின் வடிகாலாய், “நான் செய்தே தீருவேன் அதை கேட்க நீ யார்” என்று ஈகோ சண்டையில் போய் முடியும். இதற்காக நாம் அக்கறைபடுபவரிடத்து அறிவுரை கூறக் கூடாது என்றில்லை, அதை ஒரு வித பக்குவத்தோடு சொல்ல வேண்டும் என்கிறார் நியுஜெர்ஸி மருத்துவ, பல் விஞ்ஞான பல்கலை கழக பேராசிரியரும், மன நிலை மருத்துவருமான Dr.Pat Clifford.

உடல் நல பழக்க வழக்கங்களில் உடல் பயிற்சி, நல்ல உணவு உண்ணுதல் போன்றவற்றில் அறிவுறை கூறுதலும் அதை பயன் படுத்துவதும் எளிது. ஆனால் குடிப்பது, தொலை காட்சி பார்ப்பது, வீடியோ விளையாட்டு விளையாடுவது, புகைப்பது போன்றவைகளில் இது மிகவும் கடினம். இங்கிலாந்தை சேர்ந்த ஒரு பெண் வீட்டிற்கு, குழந்தை வளர்ப்பை பற்றி எடுத்து சொல்ல சென்ற செவிலித்தாயிடம் அந்த பெண் மிகவும் கடுமையாக நடந்து கொள்வதாக கேள்விப் பட்டு விசாரித்ததில், அளவுக்கதிகமான அறிவுறைகள் கேட்டு கேட்டு அந்த பெண்ணுக்கு தான் செய்வது எதுவுமே சரியில்லையோ என்ற தாழ்வு மனப்பான்மை வளர்ந்துவிட்டிருக்கிறது. ஒரு கட்டத்தில், அந்த செவிலி பெண்ணிடம் கடுமையாக நடக்க இதுவே காரணமாகிவிட்டது. புதிதாக வீட்டிற்கு வந்த மருமகளிடம் மாமியார் அறிவுரை கூற போக, எனக்கென்ன ஒன்றுமே தெரியாதா என்ன என்று மருமகள் மனதில் நினைக்க அதுவே பின்னாளில் பிரச்சினையாக உருவெடுக்கிறது.

அறிவுரை கூறுவது இரண்டு பிரிவுகள் உண்டு.

ஒன்று ஒரு செயலை பற்றிய செய்திகளை மட்டுமே கூறுவது (informative)

உதாரணமாக புகை பிடிப்பதால் வரும் தீமைகள் அதன் விளைவுகள் இதைப் பற்றிய செய்திகளை மட்டுமே சொல்வது. எதிரிலிருக்கும் புகை படிப்பவரின் செயல்களைப் பற்றி சிறிதும் அதில் சேர்க்காமல். இந்த நடைமுறை குடிப்பவர், புகை பிடிப்பவர், AIDS நோய் உள்ளவர் ஆகியோரிடத்து கடைபிடிக்க வேண்டிய முறை ஆகும். ஏனெனில் சம்பந்த பட்டவரின் நடவடிக்கையை இதில் சேர்த்து குழப்பினோமென்றால், என் விருப்பத்தை குறை கூற நீயும் சேர்ந்து கொண்டாயா என்ற தன்னிரக்கமே மிகும். இங்கே நோயாளியிடம் அறிவுரை கூறுபவர் அந்த துறையில் மிகுந்த தேர்ச்சி பெற்றவராக, ஒரு செய்தியை பகிர்ந்து கொள்ளும் ஒரே நோக்கம்தான் இருக்க வேண்டும். இந்த முறையில் பழக்கம் எந்தவகை தீமைகளை தரும் என்பதையும் சொல்லி மனதில் பயத்தை விளைவிக்கவும் செய்யலாம்.

மற்றொரு முறையில், அறிவுரை கூறுபவர் ஊக்கம் ஊட்டுபவராகவும் இருத்தல் அவசியம். (persuasive)

ஒரு 55 வயது நீரிழிவு நோய் உள்ளவரிடம் மருத்துவர் அவர் தினமும் உடற்பயிற்சி செய்ய வேண்டும், இனிப்புகளை சேர்க்க கூடாது, தினமும் தன்னுடைய சர்க்கரை அளவை பரிசோதிக்க வேண்டும் என்று எத்தனை முறை சொல்லியும் பயனில்லாமல் போனது. மருத்துவர் ஒரு உடல் நல படிப்பாளியை அணுக அவரால் நோயாளியின் நடவடிக்கைகளை மாற்ற முடிந்தது. இது எப்படி சாத்தியமானது என்பதற்கு கீழ்க்கண்ட உரையாடலை கவனியுங்கள்:

Health Educator : உங்களுக்கு உலகிலேயே அதிக மகிழ்ச்சியை தரும் ஒன்றை மட்டும் கூறுங்கள்.

நோயாளி: சந்தோஷமாக இருக்க வேண்டும்

Health Educator: உங்களுக்கு எது சந்தோஷம் தரும்

நோயாளி: அலுவலக பணி உயர்வு, பிள்ளைகளுடன் விளையாடுவது, வீட்டில் மனைவியின் உடல் நலம், அமைதி

Health Educator: உங்கள் பிள்ளையுடன் விளையாடுவதுண்டா

நோயாளி: நேரம் கிடைக்கும் போதெல்லாம் விளையாடுவேன். இப்போதெல்லாம் அவனுக்கு ஈடு கொடுக்க என்னால் முடிவதில்லை. தளர்ச்சி அடைந்துவிடுகிறேன்

Health Educator: எனக்கும் ஒரு மகன் உண்டு. அவன் மனதிற்கு மகிழ்ச்சி தரும் படிப்பு படித்து நல்ல நிலையில் இருப்பதைக்காண எனக்கு மிகவும் ஆசை. உங்களுக்கும் அப்படிப்பட்ட கனவுகள் உண்டுதானே ?

நோயாளி: என்னுடைய மகன் கல்லூரியில் படித்து முடித்து நல்ல நிலையில் வாழ்வதை பார்த்தல் (குழந்தைகள் உள்ள பெரும்பான்மையான பெற்றோர் தரும் கருத்து) என்னுடைய ஒரே கனவு. கடவுள் புன்ணியத்தில் எனக்கு கிடைக்காத வாய்ப்புக்கள் அவனுக்கு கிடைக்குமாயின் அதை அடைவதில் அவனுக்கு உறுதுணையாக இருக்கவும் முயற்சி செய்வேன்.

Health Educator: உங்கள் பிள்ளை கல்லூரிக்கு செல்லும் வரை நீங்கள் நல்ல ஆரோக்கியத்துடன் இருப்பீர்கள் என்றும் அதற்கான செயல்களை செய்வீர்கள் என்றும் நம்புகிறேன்.

நோயாளி: ஆமாம். எனக்கு ஏதாவது நேர்ந்து விட்டால் அவன் மிக கஷ்டப்படுவான். நீங்கள் சொல்வது சரி. ஒரு பெற்றோரால்தான் அடுத்தவர் மனத்தை புரிந்து கொள்ள முடியும். எனக்கென்ன பொறுப்பில்லையா.

Health Educator: அப்படி யார் சொன்னது. உங்களுக்கு பொறுப்பில்லாமல் இருக்குமா என்ன? (மீண்டும் ஒருமுறை) உங்கள் ஆரோக்கியத்தை பார்த்துக் கொள்ளுங்கள். எதனால் தளர்ச்சி வருகிறது? அலுவலகத்தில் வேலை அதிகமோ?

நோயாளி: இல்லை, எனக்கு நீரிழிவு நோய் ஆரம்ப நிலையில் உள்ளது. அது சில சமயம் அளவிற்கதிகமாக போய்விடுகிறது அதனால் தான் இருக்கும். தினமும் சர்க்கரை அளவை சரிபார்க்க நினைக்கிறேன் முடியவில்லை. மறந்து போய் விடுகிறது. பிறகு என் மனைவியடமும் மருத்துவரிடமும் பேச்சு கேட்க வேண்டியிருக்கிறது.

Health Educator: இப்படித்தான் என்னுடைய நண்பர் ஒருவர் சொல்வார். சர்க்கரை அதிகமாகி, கோமா வந்துவிட்டால் அவருடைய பிள்ளையல்லவா கஷ்டப்படும். அதனால், காலையில் பல் விளக்கியவுடன் குளியலறையிலேயே சரி பார்த்துவிடுகிறார். நீங்களும் முயற்சி செய்து பாருங்கள். சரி, எனக்கு நேரமாகிறது. உங்களுக்கு உதவி தேவைப்பட்டால் எனக்கு தொலை பேசுங்கள்.

இம்முறையில், நோயின் தீவிரம் மட்டுமே பேசப்படுவதில்லை. ஆனால் அதே சமயம் அதன் விளைவுகள், எது சந்தோஷம் என்பது போல சில விஷயங்கள் நோயாளிக்கு புரிய வைக்கப்பட்டது. சர்க்கரை சரிபார்க்க எளிய முறையும் போதிக்கப் பட்டது என்பதையும் கவனித்து கொள்ளுங்கள். பல் விளக்குவது போல சர்க்கரை அளவை சரிபார்ப்பது ஒரு நித்திய பழக்கத்தில் கொண்டு வரப்பட்டது. இங்கே அறிவுரை சொல்லப்பட்டபோதும் அது நோயாளியின் முடிவாகவே திரித்து சொல்லப் பட்டது.

»  Uses: WordPress   »  Ahren Ahimsa   »  Redesign & Maintained by Oviam Solutions