»
S
I
D
E
B
A
R
«
நுரையீரல் புற்றுநோய் -2 anatomy & Risk factors
Jan 21st, 2008 by பத்மா அர்விந்த்

புற்றுநோய் வகைகளை அறிந்து கொள்ளும் முன் நுரையீரலின் அனாடமி எப்படி செயல் படுகிறது போன்றவை பற்றி அறிதல் முக்கியம்.

நுரையீரல் உடலுக்கு சக்தியை தரும் ஆக்சிஜனை எடுத்துக்கொள்வதிலும் கரியமிலவாயுவை வெளியேற்றுவதிலும் முக்கிய உறுப்பாக செயல்படுகிறது.ஒரு நாளைக்கு சராசரியாக 22,000 முறை மூச்சு விடும் நாம், கிட்டதட்ட 9000 cubic feet காற்றை உள்ளிழுத்து வெளியிடுகிறோம்.

மூக்கின் வழியாக நாம் உள்ளிழுக்கும் காற்று, காற்று குழாய் வழியாக நுரையீரலுக்கு செல்கிறது. காற்றுக்குழாய் இரண்டாக பிரிந்து வலது, இடது நுரையீரலுக்கு செல்கிறது. வலது நுரையீரல் மூன்று பாகமாகவும் (lobes)இடது நுரையீரல் இரண்டு பிரிவாகவும் உள்ளது. இரண்டாக பிரியும் பிரான்கியல் குழாய்கள் பல நுண் கிளைகளாக பிரிந்து அல்வியோல் எனப்படும் காற்றுப்பைகளில் முடியும். கீழ்க்கண்ட படத்தில் இருப்பது போல பல நுண்ணுயிர்க்குழாய்களாக பிரிந்து இருக்கும்.

அல்வியோலை எனப்படும் காற்றுப்பைகள் மிக மென்மையான தசைகளை கொண்டது. இதில் பல நுண்ணிய இரத்தக்குழாய்கள் இருப்பதால், நுரையீரல் தமனி மூலமாக வந்த கரியமிலவாயு நிறைந்த இரத்தத்தில் உள்ள கரியமிலவாயு வெளியேறி, ஆக்சிஜனை ஏற்றுக்கொண்டு, நுரையீரல் சிறைகள் மூலமாக இதயத்திற்கு செல்கிறது.
ஆல்வியோலை சுருங்கி விரிதலையும் சில நோய்களால் நுரையீரல் பாதிக்கப்படும் போது எப்படி சுருங்கி விரியும் என்பதை கீழ்க்காணும் படம் சொல்கிறது.

பொதுவாக நுரையீரலில் சுரக்கும் சளி போன்ற திரவம் சில தூசிகளை அகற்றி வெளியேற்றும். காற்றுக்குழாயில் உள்ள சீலியா மேல் நோக்கி தூசுகளை கொண்ட மியுக்கஸை வெளியேற்ற, நாம் அறியாமலே அவற்றை விழுங்கிவிடுகிறோம். உடல் நலம் சரியில்லாமல் போனால் மட்டுமே அவை சளியாக மூக்கின் வழியாக வெளியேறும். மூக்கிலேயே உள்ள ரோமம் கூட தூசுகளை வடிகட்டும். இதையும் தாண்டி ஏதேனும் தூசு உள் நுழைந்தால் இருமல், தும்முதல் ஆகியவை நீக்குதலிலும் ஈடுபடும்.

படங்கள் gray’s anatomy, National geopgrphy தளத்தில் இருந்து பெறப்பட்டவை.

புற்றுநோய்க்கான புற காரணிகள்:External Risk Factors காற்றில் உள்ள மசு, இயந்திரங்கள் வெளியேற்றும் புகை, சிகரெட் புகை ஆகியவை ஆச்பெச்டாஸ் போன்றவை நுரையீரல் புற்றுநோய் வர முக்கிய காரணிகளாக இருக்கின்றன. சில வீடுகளில் புகை நிறைந்த எரிபொருள் சமைக்க பயன்படுத்துவது காற்றினை மாசுபடுத்துகிறது. குளிர்காலத்தில் இது போன்ற புகை வீட்டிற்குள்ளேயே சுற்றுவதால் குழந்தைகளை அதிக அளவில் பாதிக்கிறது.

எனக்கு நினைவுதெரிந்த வரையில் என் வீட்டிலேயே பலவகை எரிபொருட்களை பயன் படுத்தி இருக்கிறோம். காகிதம், மரத்தூள், விறகு, வரட்டி பின் கெரோசின் என்று பல பொருட்களை பயன் படுத்தி இருக்கிறோம். இன்னும் சில பெண்கள் புகையை ஊதுகுழலை வைத்து ஊதி கண்சிவக்க இருமுவதையும், புகையை உள்ளிழுப்பதையும் காணலாம்.
இதற்கு அடுத்த படியாக கட்டிடங்கள் கட்டிய பின் வரும் தூசிகள், ஆஸ்பெஸ்டாஸ் கூரை துணுக்குகள் என்று பலவும் உடல் நலத்தை பாதிக்கிறது.

வீடுகளில் உள்ள காற்றில் கலந்திருக்கும் பொருட்களில் கார்பன் டை ஆக்ஸைடு, பார்மால்டிஹைட், நைட்ரஜன் பெராக்சைடு, கார்பன் மோனோ ஆக்சைடு, ரேடான் எனப்படும் ரேடியோ கதிர்வீச்சு, பாசி, இன்னும் நுண்ணுயிர் கிருமிகளின் முட்டைகள் என்பன சில முக்கியமானவை ஆகும்.

ஒருவர் புகை பிடிக்கும் போது அதிலிருந்தும், புகப்பவரின் சுவாச காற்றிலும் இருந்த்து வெளிப்படும் புகை second hand smoke என்று அழைக்க படுகிறது. இதன் விளைவால் வருடத்திற்கு 150, 000 குழந்தைகள் முற்றிய நுரையீரல் நோயால் பாதிக்கப் படுவதோடு ஆண்டொன்றுக்கு 3000 குழந்தைகள் இறக்கிறார்கள். உலகளைவில் இது இன்னமும் அதிர்ச்சியூட்டும் எண்களைத்தரலாம்.

புகைபிடிப்பவரின் அருகில் இருப்போருக்கு கண் எரிச்சலும், இருமலும் ஏற்படுகிறது. இவர்களையும் மருத்துவ உலகு passive smokers என்றே அழைக்கிறது. சிகரெட் புகையில் 4000 விதமான புற்று நோய், மற்றும் வெகு துன்பம் தரக் கூடிய உடல் நலனுக்கு பாதகம் விளைவிக்கை கூடிய வேதி பொருட்கள் கலந்திருக்கின்றன. அடிக்கடி காது வலி, ஆஸ்த்மா என ப்படும் மூச்சிழுப்பு, பொதுவான அலர்ஜி,இருமல், நுரையீரல் சம்பந்தமான நோய்கள் ஏற்படுகிறது.

கருவுற்ற பெண்மணியின் அருகில் புகை பிடிப்பதால், வருடத்திற்கு அமெரிக்காவில் 18, 600 குழந்தைகள் குறைபாட்டுடன் பிறக்கின்றன. 300000 குழந்தைகளுக்கு இருமலும், bronchitis உம் வருகின்றது. 1.6 மில்லியன் குழந்தைகள் காதில் கிருமிகள் வளர்வதால், காது வலியும் சீழும் ஏற்படுவதாக மருத்துவ அறிக்கைகள் கூறுகின்றன. வெளியே பால்கனியில் புகை பிடித்தாலும், கார் கராஜில் பிடித்தாலும் உள்ளே வந்த 5 மணித்துளிகளில் புகைப்பவரின் சுவாசத்திலிருந்து இந்த வேதி பொருட்கள் வெளிப்படுகிண்றன. இப்போதெல்லாம் இங்கு குழந்தைகள் காப்பகத்தில் புகைப்பது குற்றம். சட்டப்படி அது தடை செய்ய பட்டு விட்டது. இதை விட காரில் நெடுந்தூரம் பயணிப்பவர்கள் புகைக்கும் போது பின் இருக்கையில் உள்ள குழந்தை அ ந்த காற்றை சுவாசிக்க நேருகிறது.

இதை தடுக்க காரில், வீட்டில் புகைக்காதீர்கள். புகைப்பதை நிறுத்துவது மிகவும் நல்லது. முடியாதவர்கள் குறைந்த அளவில் குழந்தைகளின் நலனை கருத்தில் கொள்ளுவது சிறந்தது. புகைப்பவர் அருகில் குழந்தைகளை இருக்க விடாதீர்கள்.

புற்றுநோய்க்கான சில அக காரணிகள் (internal risk Factors): 1. நுரையீரலில் உள்ள அல்வியோலையை சுருங்கி விரிய செய்ய உதவும் எலாச்டின் எனப்படும் பொருள் குறைவு

2.அதன் பசைத்தன்மையை குறையாமல் வைத்திருக்கும் ஈச்ட்ரோஜனின் ரிசப்டார் அளவு குறைதல்

3.தோல் வளர்ச்சி புரதம் (Epidermal growth factor)ளவில் மாற்றம்

4.மரபணுவால் புற்றுநோய்க்கான susceptibility இருத்தல் ஆகியவை ஆகும். இது பற்றி விரிவாக பிறகு.

06/06: இன மத நிற வெறிகளில் அறிவியலும் அரசியலும் -2
Jun 6th, 2005 by பத்மா அர்விந்த்

உயிரியல் விஞ்ஞானிகளும் மரபியல் விஞ்ஞானிகளும் நவீன மருத்துவம் ஆரம்பித்த நாட்முதலாய் இனவேறுபாட்டை பற்றி படிக்க ஆர்வம் கொண்டிருந்தனர். இன்னமும் மனிதனுக்கு இனவேறுபாட்டை அறிந்து கொள்வதில் மிகுந்த ஆர்வம் உண்டு.பிற நிற இன மனிதனைப்பற்றி முதலில் பயமும், அதை போக்க தன் இனத்துடன் சேர்ந்து கூட்டு சேர்வதும் பின் மெதுவாக தெரிந்து கொள்ள ஆர்வம் காட்டுவதுமாய் பல நிலைகள் உண்டு.
ஒரு எல்லைகுட்பட்ட வரையில் பிற உயிரினக்களுடன் கலப்பில்லாத வரையில், ஒரு குறிப்பிட்ட இடத்தில் நிகழும் உயிரின பெருக்கம் ஒரு இனத்தை சார்ந்தது என சொல்லலாம்.இந்த நில ரீதியான பிரிவு ஒருவகையில் ஒரு குறிப்பிட்ட உயிரினங்களில் சில வேற்றுமையை தருகிறது. இதை மனித இனத்திற்கு எடுத்து செல்லும் போது உருவம் நிறம், அடிப்படை குணங்கள் ஆகியவற்றில் வேற்றுமை நிகழ்கிறது. இதனால் ஆரம்ப கால உயிரியல் விஞ்ஞானிகள் ஐரோபியருக்கும், ஆ ப்பிரிக்கருக்கும் இடையே உள்ள வேற்றுமையை கொண்டு அதை இரண்டு இனமாக காட்டினார்கள்.

லினேயஸ் என்ற 18 ஆம் நூற்றாணடை சேர்ந்த உடல் பரிணானம (Taxonomy) அறிவியலார் ஆசியர்கள், அமெரிக்க பழங்குடியினர் என்ற இரண்டையும் சேர்த்து 4 இனங்களாக மனிதரை பிரிக்க கூடும் என்று அறிவித்தார். இது இன ங்களை பிரிக்கும் மிக பழமையான முறையும், புவியியல் அடிப்படையாய் கொண்டதும் ஆகும்.

ஜோஹன் ப்லூமென்பாக் என்ற விஞ்ஞானி லினேயஸின் கருத்தை ஒப்புக்கொண்டாலும் மனித இனத்தை இப்படி 4 இனங்களாக கலப்பே இல்லாமல் பிரிக்க முடியாது என்று கருதினார்.

ஒரு இனம் சில மரபுக்கூறுகளை மற்ற இனத்தில் சிறிதளாவது கலக்கிறது என்று தன்னுடைய ஆய்வு குறிப்பில் 1975 இல் இவர் எழுதினார். கலப்பு உண்டு என்று கருதிய போதிலுல் கிழக்கு ஐரோபியர்களை இனங்களில் முதலாவதாக கருதி, மற்ற மனித இனங்கள் இவர்களின் வழிவந்தவர்கள் என்றும் கருதினார். இவருடைய கருத்தின்படி ஆப்பிரிக்கர்கள் கூட இரண்டு வம்சாவளியின் முன் ஐரோபியர்களாக இருந்திருக்க கூடும் இது நவீன விஞ்ஞானிகளின் கருத்துக்கு எதிர்மறையாக இருக்கிறது.

200 வருடங்களாக மனித இனத்தின் தொடர்பை விஞ்ஞானிகள் ஆராய்கிந்து வந்துள்ளனர்.இன்னும் சிலர் மனிதர்களை பல்வேறு குழுக்களாக பிரித்து பார்த்தனர். இந்த இரு வேறுபட்ட நிலையில் ஒரு அரசு தனக்கு சாதகமான ஒரு நிலை எடுத்து அதன் திட்டங்களையும் மருத்துவ துறைக்கு சட்டங்களையும் எழுத முடியும். மனிதர்களின் அடிப்படை மருத்துவ தனமையின் அடிப்படையில் ஆராய்ச்சி செய்வது, இ ன வேறுபாடுகளை தோற்றுவித்து பல கொடூரங்களை செய்வது அந்த ஆராய்ச்சிக்கே மிக பெரிய இழுக்கு. அமெரிக்காவின் தொன்மையான அடிமைத்தனமும், கறுப்பர்களுக்கு இழைக்க பட்ட கொடுமையும், இன்னும் தொடரும் குற்றங்களும், ஜெர்மனியின் இயூஜெனிக்ஸ் கொள்கையும் நினைவுக்கு வருகின்றன.

கறுப்பர் இனத்தை சேர்ந்தவர்களுக்கு இன்னமும் பல இடங்களில் கொடுமை நடத்தப்படுவதையும் கண்கூடாக காணலாம். பார்வையும் தொலைக்காட்சி மூலம் அறிந்ததுவும் நமது நோக்கை மாசுபடுத்தகூடியவை. நான் 1985 இல் முதன்முதலாக ஒரு அறிவியல் கூட்டத்தின் பொருட்டு அமெரிக்காவில் உள்ள ச்டீம்போட் ஸ்ப்ரிங்ஸ் (steamboat springs) என்ற இடத்திற்கு 10 நாட்கள் வந்திருந்தேன். பலரை சந்தித்து மேல் ஆராய்ச்சிக்கு ஒரு இடத்தை பிடிப்பது முக்கிய நோக்கம் என்பதும், கூட்டம் முடிந்ததும் மீண்டும் இந்தியா சென்று விடுவேன் என்பதாலும் நான் வழக்கமாக அணியும் உடைகளையே எடுத்து வந்திருந்தேன். நான் தங்கிய இடமோ ஒரு truck drivers இடமான super 8 Motel. (அதன் வாடகைக்கு மேல் இந்திய அரசின் உதவி தொகை இல்லை). முதலில் வந்திறங்கிய எனக்கு நேர மாற்றத்தின் அவஸ்தை ஒருபக்கம். 6-7 அடிஉயரமும் கரிய நிறமும், உடலில் பல வண்ண பச்சை கோலங்களுமாக என்னையும் அறியாமல் ஓட்டுநர்களை பார்த்ததும் ஒரு பய உணர்ச்சி வந்தது உண்மை. குளிர் -40 பாரன்ஹீட்.. மறுநாள் காலை அங்கிருந்து அறிவியல் கூட்டம் நடக்கும் இடத்திற்கு செல்ல கிளம்பி வந்த போது, 2 மைல்தூரம் செல்லவேண்டும் என்பதும் என்னால் நடந்து செல்வது இயலாது என்றும் மோட்டல் நிர்வாகத்தினரிடமிருந்து தெரிந்து கொண்டேன். ஆனால் அங்கிருந்து தன்வழியே செல்ல வேண்டிய ஒரு ஓட்டுநர் தன்னுடைய 18 சக்கர ட்ரச்கில் அழைத்து சென்ற போது அளவிற்கதிகமான தேவையில்லாத பயம் வந்ததும், அதே சமயம் அன்று மாலை ஒரு வெள்ளைகாரர் நடந்து வந்து கொண்டிருந்த எனக்கு தன் வாகனத்தில் இடம் தந்தபோது ஒருவித சகஜ நிலை இருந்ததையும் என்ன வென்று சொல்வீர்கள்.இதில் இனவெறி இல்லைஎன்றாலும் இனப்பாகுபாடு இருப்பது உண்மைதானே. இப்போது எனக்கு பல ஆப்பிரிக்க அமெரிக்க நண்பர்கள் உண்டு என்பதால் அந்த பயத்தை நினைத்தால் சிரிப்புத்தான் வருகிறது..

மருத்துவ மரபியல் பற்ற்ய ஆராய்ச்சி 20 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்திலிருந்து சூடுபிடித்தது என்று சொல்லலாம்.1901இல் இரத்த வகைகள் A, B, AB, O என்று வரையறுக்க பட்டது.கார்ல் லண்ட்ச்டைனர் இரத்த வகைகளுக்கு இடையே நடைபெறும் எதிர்ப்பி வினைகளை(Immune reaction) பற்றி தொகுத்திருந்தார். இனத்திற்கும் மருத்துவத்திற்கும் இடையே உள்ள தொடர்பை அறியும் ஆராய்ச்சியில் புகழ்பெற்ற டன்ஸ்டன் இரத்த செல்கள் கலக்கும் போது ஒருவித அ ண்டிபாடி என ப்படும் புரதத்துடன் செயல்வினை புரிவதாகவும் நான்குவிதமாக இவை செயல்படுவதாகவும், ஒரே இன இரத்தம் கலக்கும் போது இத்தகைய எதிர்வினைகள் ஏற்படுவது இல்லை எனவும் கருதினார். இதிலிருந்துதான் இரத்த குழுக்கல் தெரியவந்தது. 1991இல் தான் முதன்முறையாக ABO குழுவின் மரபணுக்களை பற்றி தெரிந்தது.
இந்த ABO மரபணுக்கள் எல்லாவித வாய்ப்புகளிலும், பலவித மாறுபாட்டுக்களுடன் (permutation, combination) வரும் போதுஉலக மக்கள் தொகையின் மாற்றங்கள் மக்கள் தோன்றிய நாட்டின் அல்லது கண்டத்தின் தன்மையை ஒரளவுக்கேனும் சொல்ல முடியும்.
மரபணுக்களும், மரபணுக்களின் புரதமாகாத மிகப்பெரிய ஜீன்களுக்கும் இடையே உள்ள தன்மை மனிதர்களிடையே சிறிதளவேனும் மாறுபடுகிறது.
இரண்டு மனிதர்களிடையே உள்ள வேறுபாடு இரண்டு குழுக்களிடையே உள்ள வேறுபாட்டைவிட மிக அதிகம். இ ந்த நுண்ணிய variantsஐ அல்லீல்(allele) என்று அழைக்கிறோம்.இதிலிருந்து ஆரம்பித்து படிப்படியாக இன்று மனித ஜீனோம் திட்டம் வரை வந்த நாம், டன்ஸ்டன் சொல்வது போல ஒற்றுமையில் வேற்றுமையை காட்டுகிறோம்.

மனித இனப்பகுபாட்டின் அறிவியல் விளக்கம் இன்னும் வரும்.
சில சொற்களுக்கு தமிழாக்கம் தெரிந்தவர்கள் சொல்லவும். அடுத்த பதிவிற்கு உபயோகமாக இருக்கும்.
Allele, variants, exon and Intron

ஆதாரம்: www.hapmap.org
www.nature.com/ng/supplements
nature, vol 431, Oct 2004

31/05: இன நிற மத வெறியின் அரசியலும் அறிவியலும் -1
May 31st, 2005 by பத்மா அர்விந்த்

நான் செல்லும் பல விவாதக்கூட்டங்களில் கலந்து கொள்பவர்கள் வெள்ளை இனத்தவர்தான் 98% (white Caucasian). இவர்கள் ஒன்றாகவே 20+ வருடங்கள் ஒரே துறையில் வேலை பார்த்தவர்கள், பார்ப்பவர்கள். கிட்டதட்ட ஒரே வயது கூட. பள்ளி நாட்களையும் பழைய கல்லூரி நாட்களையும் ஒன்றாய் கழித்தவர்கள். அவர்களிடையே புதிதாக ஒருவர் வந்தாலே “new kid in the block” என்று பார்க்க கூடியவர்கள். அப்படி இருக்ககையில் புதிதாய் ஒரு இந்தியர், அதுவும் பெண் இடையில் புகுந்து, புகுந்ததோடு மட்டுமின்றி புதிதாய் கருத்துக்களையும் சொல்லி அவர்களையே பழக்குதற்கான பணியையும் தொடர்ந்தால் எப்படி வரவேற்பு இருக்கும் என்று நினைத்துப்பாருங்கள். 20 வருடமாக செய்த தொழிலில் மாற்றங்கள் வரும் போது அச்சப்படுவது மனித இயல்பு. தவறிழித்துவிடுமோ என்ற அச்சமும், அதை தன்னுடைய சகா பார்க்க நேரிட்டால் கேலி செய்வார்களோ என்ற தன்னிரக்கம், மேலும் தெரியாத பாதையை குறித்து மனதில் உள்ள ஒருவித குழப்பம் இவை அனைத்தையும் மீறி புதிய செயல்பாடுகளும் திட்டங்களும் சேர்க்க படுகின்றன. முதலில் நான் சேர்ந்த போது அலட்சியமாக நினைத்தவர்கள் இப்போது அன்போடும் மரியாதையோடும் பழகுவதும் தொடர்பு கொள்வதும் வரவேற்கத்தக்கது. எதுவுமே ஒருவித கட்டாயத்தில் வருவதைவிட, தானே உணர்ந்து வரும் மரியாதையும் நட்பும் சிறந்தது. அறிவியல் விவாத கூட்டங்கள் வேறு. அங்கே பலதரப்பட்ட விஞ்ஞானிகளும் எல்லாருக்கும் பழக்கம். ஆனால் சில துறைகளில் இன்னமும் மேலாண்மைதுறையில் இந்தியர்கள் குறைவு. என்னதான் இங்கேயே பிறந்து வளர்ந்தாலும் முதல் வாரிசுகளுக்கு சமுதாய முக்கியத்துவம் வர நிரூபிக்க வேண்டிய அவசியம் உண்டு. மேலோட்டமாக தெரியாவிட்டாலும் பல முறை பார்க்கலாம். அதுவும் நான் வந்த புதிதில் (89 இல்) ஹூயுஸ்டன் கடைகளில் வித்தியாசத்தை உணர முடியும். இப்போது போல பெரும்பாலான சாதாரண மக்கள் இந்தியர்களை பற்றி அவ்வளவாக அறிந்திருக்கவில்லை. ஏன் இந்த தனிமைப்படுத்தும் குணம், எதானால் இத்தனை நிறவெறி என்று யோசித்தால் விடை காணமுடியா குழப்பமும் நாடு இனம் என்று இல்லாமல் இது பரவிக்கிடப்பதும் எளிதாய் அறியலாம்.

ஜாதி மதங்களை பாரோம்- உயர்
ஜன்மமித் தேசத்திலெய்தின ராயின்
வேதியராயினும் ஒன்றே அன்றி
வேறு குலத்தினராயினும் ஒன்றே

என்றெல்லாம் பாடி வருடங்கள் பல போனாலும், மக்களின் மனம் என்னவோ மாறவேயில்லை. எங்கிருந்து இந்த இனவெறி, நிறவெறி தோன்றுகிறது?.மனிதன் தன்னை பாதுகாத்துக்கொள்ள சில சட்டங்களையும் கண்ணுக்கே புலப்படாத சில கட்டுபாடுகளையும் ஆரம்பித்து வைக்கிறான். இது பிறகு கல்லில் எழுதிய எழுத்தாய் மாறிவிடுகிறது. காலம் காலமாய் மக்கள் வேதனைப்படவும், ஒருவரை மற்றவர் அடக்கி ஆளவும் உபயோகிக்க படுகிறது. சமமாய் இருந்த மனிதர்களிடையே ஏற்ற தாழ்வுகள் வரத்தொடங்குகின்றன.

இன்னமும் சாதி, இனம் நிறம் என்று பாடுபாடு காண்பது எல்லா நாட்டிலும் நடந்து கொண்டுதானிருக்கிறது. இன வெறி என்பது ஒரு கொடூரமான தன்மை. இது மனிதனின் குணங்கள் அவனால் பிறப்பின் அடிப்படையில் கொள்ளபடுவதாக எண்ணுவதாகும். அமெரிக்காவில் இதற்காக சட்டத்தின் உதவியை நாடமுடியும் என்றாலும், அடிப்படையில் இன்னமும் இன வெறி, நிற வெறி இருந்துகொண்டுதானிருக்கிறது. இனவெறியும் பிடிப்பும் மனிதனை மற்ற மிருகங்களிலிருந்து வேறுபடுத்துகிறது. இதனாலேயே உயர் சாதிக்காரர்கள் என்று சொல்லி கொள்பவர்கள் தங்கள் குடும்பத்தை சேர்ந்த ஒருவர் தவறிழைத்தாலும், குடும்ப குல பெயரை காத்திட எண்ணி அவரை பாதுகாப்பதும், அதே சமயம் கெட்டு போன ஒரு மனிதன் கூட என் முன்னோர் பெரிய குடும்பத்தை சேர்ந்தவர் தெரியுமா என்று பெருமை பேசுவதும் நடக்கிறது. அதே போல தவறு நடந்தவர்களை அடையாளம் காட்ட என்று கவலர் நிலையம் செல்பவர்கள் ஒரு ஆப்பிரிக்க இனத்தவரை அடையாளம் காட்டுவதும் நடக்கிறது. பல முறை வன்புணர்ந்த வழக்குகளில் ஆப்பிரிக்க இனத்தவரை கைது செய்து பொய்வழக்குகளும் பதிவாயிருக்கின்றன. கலிபோர்னியா பக்கத்தில் ஆப்பிரிக்க இனத்தவர் உயர்தர வாகனம் செலுத்தினால் காவலர்கள் அவர்களை ஓரம் கட்டுவதும் பரிசோதிப்பதும் இன்னமும் நடக்கிறது. இந்தியாவும் சளைத்ததில்லை. அதனால்தான் செயேந்திரருக்கு இத்தனை பார்ப்பனர்களின் ஆதரவும், பத்திரிக்களைன் ஆதரவும். தலித்துக்களுக்கு நடக்கும் கொடுமையும் இன்னமும் போகவில்லை. நல்ல இரத்தம் ஓடுகிறது, அ வன் தவறே செய்திருக்க மாட்டான் என்பது போல பேசுவதும், அதேபோல நாங்கள் நல்ல ஆசாரத்து குடும்பத்தை செர்ந்தவர்கள், எங்கள் பெண் ஒரு போதும் அவனை காதலித்து இருக்க மாட்டாள் என்று வீறாப்பு சொல்வதும் பார்க்கிறோம்.இவர்கள் சொல்லுகின்ற ஆசாரத்துக்கும் ஒழுக்கத்திற்கும் மிகப்பெரிய வித்தியாசம் உண்டு.

நவீன இனவெறிக்காரர்கள் இதையே சற்று மாற்றி வரலாற்றின் துணையும் எடுத்துக்காட்டுகளுடனும் வந்து பேசுகிறார்கள். அமெரிக்காவில் இன்னமும் நான் ஐரிஷ்காரன், இதாலியன் என்று பெருமை பேசுவோர் உண்டு. விதிவிலக்குகள் இருந்தாலும் இந்தியர்கள் கூட வெள்ளை அமெரிக்கர்களிடம் பாராட்டும் அதே நட்பை ஆப்பிரிக்க இனத்தவரிடம் காண்பிப்பதில்லை. அறிவியல் துணை கொண்டு இப்போது இனத்தையும் நிறத்தையும் பிரிவு படுத்தி பேச வந்திருக்கிறார்கள்.
அவன் பார்ப்பனன் அவன் நன்றாக படிப்பதில் தவறென்ன என்றும் இவன் விவசாயி தான், இவன் படித்து என்ன ஆக போகிறது என்றும் பாகுபடுத்தும் ஆசிரியர்களும் உண்டு. மனிதனின் குணங்களுக்கும் அவனுடைய குலத்தை காட்டுவதும் தவறே. எத்தனை முட்டாள்கள் ஒருவனின் குடும்பத்தில் இருந்தாலும் அக்குடும்பத்தில் ஒருவன் புத்திசாலி என்றால் அவன் புத்திசாலிதான். அதே போல ஒருவன் குடும்பத்தில் அல்லது இனத்தில் எத்தனை புத்திசாலிகள் இருப்பினும், அங்கு தோன்றிய முட்டாள் முட்டாள் ஆகத்தான் இருக்க முடியும். எனவே குலத்தின் அடிப்படையில் குணங்களை வரையறுப்பதும், வேலையை தீர்மானிப்பதும் தவறே ஆகும்.
இதில் உள்ள அரசியலையும் அறிவியலையும் தொடர்ந்து வரும் பதிவுகளில் காணலாம எனக்கு தெரிந்த அளவு, நான் பார்த்த வ்ரை எழுதுகிறேன்.்.

இந்தப் பதிவின் திறத்தை தமிழ்மணம்.காம் தளத்தின் வழியே பிறருக்குச் சொல்லுங்கள் இதுவரை இதன் தரக்கணிப்பு: கணிப்பைச் சுட்ட நட்சத்திரங்களில் சொடுக்கவும்
Comments madeஅல்வாசிட்டி.வி wrote:
பதிவு நன்றாக இருக்கிறது. நம்மூருல சாதி வெறின்ன, வெளியூர்ல இனவெறி. நம்மூர்ல மட்டும் தான் இந்த ‘வெறி’ பிரச்சனைகள் என்று நினைக்க முடியுமா? வேறு வடிவத்தில் வெளிநாட்டில். எனக்கு இந்த சாதி இன வெறிகளின் வேர் என்ன என்பதை அறிந்துக் கொள்ள ஆசை. ‘நிறம்’ மட்டும் தானா பிரச்சனை?

தொடர்ந்து எழுதுங்கள்.

reply to this comment
01/06 02:24:59
தங்கமணி wrote:
நல்ல பதிவு பத்மா. மனிதர்கள் தங்களை வேற்றுமைப்படுத்தி உயர்வுபடுத்திக்கொள்வதும் மற்றவரை தாழ்த்துவதும் எல்லா இடங்களிலும் இருக்கிறது. அதன் அடிப்படையிலான அரசியல் மிக நுட்பமானது; அதில் உள்ள அறிவியல் குறித்து உங்கள் பார்வையையும், அனுபவத்தையும் அறிந்துகொள்ள ஆவலாய் இருக்கிறேன். நன்றிகள்.

reply to this comment
01/06 02:52:47
sarah wrote:
Thank you Padma for sharing your nice thoughts with us.

reply to this comment
01/06 03:08:05
Ibnu Hamdun wrote:
it is really a food for thought.
Thanks madam

reply to this comment
01/06 07:20:01
Ibnu Hamdun wrote:
it is really a food for thought.
Thanks madam

reply to this comment
01/06 07:26:38
Ibnu Hamdun wrote:
it is really a food for thought.
Thanks madam

reply to this comment
01/06 07:27:03
Ibnu Hamdun wrote:
it is really a food for thought.
Thanks madam

reply to this comment
01/06 07:39:22
Padma Arvind wrote:
விஜய்
நன்றி. உண்மைதான் ஒவ்வொரு நாட்டிலும் ஏதோ ஒருவகையில் மனிதனை மனிதன் தாழ்த்துவது நடக்கிறது

reply to this comment
01/06 18:15:11
padma wrote:
தங்கமணி
அறிவியல் குறித்து மேலும் தெரிய தெரிய இத்தனை காலம் இன்வேறுபாட்டின் அடிப்படையில் விஞ்ஞானிகள் அறிவியலையும், அறிவியல் மூலம் இன வேறுபாட்டையும் அறிய முயற்சி செய்தது வியப்பாக இருக்கிறது. எவ்வாறு எந்த ஒரு கண்டுபிடிப்பும் நல்லது, அல்லது ஆகிய இரண்டுக்கும் பயன்படுமோ அது போல தீயதற்கு பயன் படுத்தாமல் இருக்க நினைப்பது ஒன்றூதான் நாம் செய்ய கூடிய செயல்.
உங்களின் பழைய பதிவுகளை(2003)படித்தேன். மிக சிறப்பாக எழுதி இருக்கிறீர்கள்.

reply to this comment
01/06 20:49:45
padma wrote:
சாரா
ஊக்கத்திற்கு நன்றி. உங்களின் ஆங்கில பதிவுகளை படித்தேன். மிக சிறந்த ஆழ்ந்த சிந்தனையை வெளிப்படுத்துகிறீர்கள். நன்றி
இப்னு ஹம்டென்
நன்றிகள்.

reply to this comment

»  Uses: WordPress   »  Ahren Ahimsa   »  Redesign & Maintained by Oviam Solutions