அதிகம் திரைப்படங்கள் பார்க்காத ஒருவரிடம் இருந்து என்ன சுவாரசியமான எண்ணங்கள் வரும் என்று தோன்றாதபொதும், பாலாவின் விருப்பத்திற்காக இந்த பதிவு. பொதுவாகவே எந்த திரைப்படம் பார்த்தாலும் அது எத்தனை சுவாரசியமானதாக இருந்தாலும், இரவு 8 மணிக்கு மேல் 9 வரை மட்டுமே பார்ப்போம். 9 மணி ஆனால் டிவிடியை நிறுத்திவிடுவோம். ஆக்ககூடி ஒரு படம் பார்த்து முடிக்க 4 நாட்கள் ஆகும். சில சமயம் வார நாட்களில் பார்க்க முடியாமல் போய், ஆரம்ப கதை மறந்து போனதால், பாதிக்கு மேல பார்க்காமலே, வேறு படத்திற்கு மாறுவதும் உண்டு. Free willy, disney படங்கள் பின் sandlot , coach carter போன்ற விளையாட்டோடு சம்பந்தம் உள்ள படங்கள் என்று எங்கள் படங்கள் பார்க்கும் அனுபவமும் என் மகனோட விருப்பமாகி போனது.
சமீபகாலங்களில் இது முற்றிலும் மாறி நகைச்சுவை படங்கள் என்று காதலிக்க நேரமில்லை, படோசன், சந்திரபாபு நாகேஷ் நகைச்சுவை தொகுப்புகள் வரிசையில் சற்றே விலகி பார்த்த படங்கள் ஆனந்தும் Bucket List உம்.
- அ. எந்த வயதில் சினிமா பார்க்க ஆரம்பித்தீர்கள்?
நாங்கள் சிறுவர்களாக இருந்த போது 4 ஆம் வகுப்பிற்கு பிறகு ஒவ்வொரு ஆண்டு இறுதித்தேர்வு முடிந்தபின், அப்பா எங்கள் அனைவரையும் திரைப்படம் ஒண்றிற்கு அழைத்துப் போவார். அது பெரும்பாலும் ஆதிபராசக்தி, வா ராஜா வா போன்ற படங்களாகத்தான் இருக்கும்..
ஆ, நினைவுதெரிந்து கண்ட முதல் சினிமா?
ஞான ஒளி. பக்கத்துவீட்டில் வசிப்பவர்கள் வைத்தீஸ்வரன் கோவிலில் இருந்து சீர்காழிக்கு சென்று படம் பார்க்க திட்டமிட்ட போது, என்னையும் அழைத்துச் செல்ல அப்பாவிடம் அனுமதி பெற்றிருந்தார்கள். என்ன காரணத்தோலோ எங்களுக்கு டிக்கெட் கிடைக்காமல் இறுதி காட்சி பார்க்க நேரிட்டது. கடைசி பேருந்தும் கிடைக்காமல் வீட்டிற்கு நடந்துவர, காலெல்லாம் வலி, பாதித்தூக்கம், அப்பாவின் கோபம் எதிர்பார்த்து பயம் கலந்த கலவையாய் வீட்டிற்கு வந்தேன். அடுத்த ஒருவாரம் எனக்கு மட்டும் இல்லாமல் பக்கத்துவீட்டு அக்காவிற்கும் நல்ல சஹஸ்ரநாமம். பெண்களாக தனியே நடந்து வருவது எத்தனை ஆபத்தானது என்பதே அப்பாவின் கோபத்திற்கு அடிப்படை காரணமாக இருந்தது.
என்ன உணர்ந்தீர்கள்?
படத்தை யார் பார்த்தார்கள்? பயம் மட்டுமே இருக்க பாதியில் தூங்கிவிட்டேன். மிக சத்தமான பாட்டு (தேவனே என்னை பாருங்கள்) மட்டும் நினைவில் இருக்கிறது. நடைமுறை பழக்கத்துக்கும் படத்துக்குமான முரண் மனதில் பட்டது அப்போதுதான்.
2. கடைசியாக அரங்கில் அமர்ந்து பார்த்த தமிழ் சினிமா?
தமிழ்: தளபதி திருமணத்திற்காக இந்தியா போனபோது பார்த்தது.
3. கடைசியாக அரங்கிலன்றிப் பார்த்த தமிழ் சினிமா எது, எங்கே, என்ன உணர்ந்தீர்கள்?
சென்ற வாரம் வீட்டில் இருந்த இறுக்கமான சூழலை குறைக்க பார்த்த படம் பலே பாண்டியா. முதலில் கவனம் குறைவாக பார்த்த போதும், போக போக மனதை இலேசாக்கிய அதிக தூக்கல் இல்லாத காமெடி.
4. மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா
நூல்வேலி, தண்ணீர் தண்ணீர்ம் வீடு போன்ற படங்கள் சிந்திக்கவும் சகோதரர்களுடன் நிறைய கடித பரிமாற்றலுக்கும் காரணமாக இருந்திருக்கின்றன.
சட்டப்படி குற்றமான ஒரு செயல், (18 வயதிற்குள்ளான பெண் அல்லது ஆண் விருப்பப்பட்டாலும் புணர்வென்பது இங்கே குற்றம்) திரைப்படம் முழுதும் அவரவர் நியாயமாக பேசப்பட்ட திரைப்படம், அப்போது நிறையவே யோசிக்க வைத்தது. எப்படி பல குடும்பங்களில் இது போன்ற பாலியல் பலாத்காரங்கள் வெளிவராமல் போகின்றன எனவும் சிந்திக்க வைத்தது.
அடிப்படைத்தேவையான தண்ணீருக்கு கூட கஷ்டப்படும் நிலைஇல் உள்ள மக்களைப்பற்றிய நினைவு இன்றும் நான் தண்ணீரை வீணாக்கும் போது தோன்றி என்னை திருத்தக்கூடிய வண்ணம் மிகவும் பாதித்த ஒரு திரைப்படம் தண்ணீர் தண்ணீர்.
மத்தியதர மக்களுக்கு எட்டாக்கனியாக உள்ள வீடொன்றை கட்டும் போது படும் சிரமங்கள், இயல்பான நடிப்பு போன்றவை திரைப்படம் என்பதை மறந்து இயல்பான நடைமுறைக்கு இட்டு சென்ற திரைப்படம் வீடு.
5-அ. உங்களை மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா – அரசியல் சம்பவம்?
நேற்று இன்று நாளை திரைப்படம் வெளியான அன்று கும்பகோணத்தில் நடந்த வன்முறை, அதன் தொடர்பாக பள்ளி, கல்லூரிகள் நாட்கணக்கில் மூடப்பட்ட சம்பவம் இன்னமும் நினைவில் இருக்கிறது.இப்போதும் சினிமாவும் அரசியலும் அவ்வப்போது கலகலப்பூட்டினாலும், அது போன்ற வன்முறை சம்பவங்கள் குறைவு.
5-ஆ. உங்களை மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா – தொழில்நுட்ப சம்பவம்?
மூடுபனி திரைப்படத்தில் அறையாக தேடும் காட்சி பிடித்திருந்தது. மற்ற எதுவும் நினைவில் இல்லை.
6. தமிழ்ச்சினிமா பற்றி வாசிப்பதுண்டா?
பதிவுகளில் அவ்வப்போது—
7. தமிழ்ச்சினிமா இசை?
எந்த மொழியானாலும் இசை எனக்கு பிடித்திருக்க அதன் எளிமையான கவிநயம் உள்ள பாடல் வேண்டும்.மென்மையான இசை பாடலை ஆக்கிரமிக்காத அல்லது மூழ்கடிக்காத மென்மையான் இசை வேண்டும். அந்த வகையில் எனக்கு இன்னமும் பிடித்தவை பழைய பாடல்கள்தான். பரவலாக இசை அனுபவத்தை கொண்டு சேர்த்ததில் சினிமா இசைக்கு முக்கியத்துவம் உண்டு. ஹிந்திப்பாடல்களிலுமெனக்கு அதிகம் விருப்பமானவை பழைய திரை இசை பாடல்களே.
8. தமிழ் தவிர வேறு இந்திய, உலக மொழி சினிமா பார்ப்பதுண்டா? அதிகம் தாக்கிய படங்கள்?
கணவருடன் சேர்ந்து பார்க்கும் படங்களில் ஹிந்தி அதிகம். பிள்ளைக்கும் ஷாருக்கான் படங்களில் பிடித்தம் உண்டு. ஆங்கில படங்களில் குழந்தைகளுக்கான எல்லா படங்களும் பார்ப்பதோடு வாங்கிச்சேகரிப்பதும் உண்டு.
ஆங்கில படங்களில் அதிகம் பாதித்தவை: The Untouchables, Scent of a woman
ஹிந்தியில் ஆனந்த், ஷோலே, நயாடார், அமர்பிரேம். அடிக்கடி பார்க்கும் படம் படோசன்.
மலையாளத்தில் ஓளங்கள். எப்போதாகிலும் சில சீன, ஸ்பனிஷ் மொழிப்படங்கள் பார்ப்பதுண்டு.
9. தமிழ்ச்சினிமா உலகுடன் நேரடித்தொடர்பு உண்டா? என்ன செய்தீர்கள்? பிடித்ததா? அதை மீண்டும் செய்வீர்களா? தமிழ்ச்சினிமா மேம்பட அது உதவுமா?
இல்லை. விருப்பமும் இல்லை. கலைத்துறையில் பணியாற்ற பொறுமை, ஆர்வம் தேவை. என்னிடம் அது மிகக் குறைவு
10. தமிழ்ச்சினிமாவின் எதிர்காலம் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
முன்பெல்லாம் திரைப்படம் பார்ப்பதென்பது ஒரு அனுபவம். குடும்பத்தோடு சென்று பார்ப்பது ஒரு பொழுது போக்கு வழி. இப்போது பெருகி வரும் இணைய வழி இலவச படங்களும் இன்னபிறவும் வந்தாலும், அது மத்தியதர மக்களிடம் மட்டுமே பரவலாக இருக்கும். கணிணி இன்னபிற வகைகளில் மிக அதிகமாக திரைப்படங்கள் பார்த்தாலும் எதிர்பார்த்து காத்திருந்து பார்க்கிற அந்த அனுபவம் குறைவாகவே இருக்கும். மேல்தர மத்தியதர மக்களும் பணக்காரர்களும் வீட்டிலேயே திரை அரங்கினை அமைக்க கூட முடியும். ஆனாலும் இவை எல்லாம் கைகூடாத தொழிலாளர்கள், கூலி வேலை செய்பவர்கள், இரசிகர்கள், போன்றோருக்கு திரை அரங்குகளில் சென்று திரைப்படம் பார்ப்பது தொடர்ந்தே இருக்கும். முன்பைவிட இப்போதெல்லாம் திரைப்படங்கள் தயாரிக்க ஆகும் செல்வை ஈடு செய்ய டிக்கெட் விலை இன்னும் அதிகமாக ஏற்றப்படும். நாயகர்களின் ஊதியம் செலவில் பெரும்பகுதி இருக்கும் நிலை மாறலாம்.
11. அடுத்த ஓராண்டு தமிழில் சினிமா கிடையாது, மற்றும் சினிமா பற்றிய சமாச்சாரங்கள், செய்திகள் எதுவுமே பத்திரிகைகள், தொலைக்காட்சி, இணையம் உள்ளிட்ட ஊடகங்களில் கிடையாது என்று வைத்துக்கொள்வோம்? உங்களுக்கு எப்படியிருக்கும்? தமிழர்களுக்கு என்ன ஆகும் என்று நினைக்கிறீர்கள்?
தனிப்பட்ட முறையில் எனக்கு எந்த பாதிப்பும் இருக்காது. மற்றவர்களும் வேறு பல கலைகள், நாடகம் போன்ற துறைகளில் கவனம் செலுத்துவார்கள். நசித்துப் போன கிராமிய கலைகளும் இன்னமும் அதிக கவனம் பெறலாம். ஒரு பொழுது போக்கு இல்லை என்றால், மன அழுத்தத்தை போக்கிக்கொள்ளவும் கனவுலகில் சஞ்சரிக்கவும் வேறு பொழுதுபோக்குகளை தேடவோ உண்டாக்கிக் கொள்ளவோ முடியும். திரைத்துறை தொடர்பு கொண்ட நிறைய தொழிலாளர்கள் பாதிக்கப்படுவார்கள். இன்னும் இது குறித்து எழுதாதவர்கள் தொடர்ந்து எழுதலாம்.