»
S
I
D
E
B
A
R
«
தீண்டாமை, மதங்கள், பெண்கள் இன்னபிற -4
March 17th, 2006 by பத்மா அர்விந்த்

தீண்டாமை கொடுமை என்றால் இதில் எல்லா மதங்கள் அனைத்திற்கும் உள்ள ஒரு ஒற்றுமையாக இவர்கள் ஆதிக்கம் செலுத்தி வரும் பிறவிகள் உண்டு. அது பெண்கள் தான். இதில் இன நிற வேறுபாடு இல்லை. ஆப்பிரிக்க அமெரிக்க பெண்ணாகவும் அதிலும் ஏழையாகவும் இருந்துவிட்டால் கேட்கவே வேண்டும்.

இதில் எந்த மதமானாலும் வேறுபாடில்லை. இந்த நிறுவனங்கள் அனைத்தும் நிறுவப்பட்டதும் அதன் கொள்கைகள் வரையறை செய்யப்பட்டதும் ஆண்களால்தானே. இறைநம்பிக்கை இல்லாத பலருக்குகூட இந்த நீதியில் உடன்பாடு இருக்கிறது.

யூதர்கள் இனம் பெண்கள் மாதத்தில் ஒருவாரம் மட்டுமே புனிதமானவர்கள் எனறு சொல்கிறது.மாத விலக்கு இருக்கும் ஒருவாரம், அதற்கு முன்னும் பின்னும் இரண்டு வாரங்கள் தூய்மை இல்லாதவாரம் என்பதால் எந்த நிகழ்ச்சியிலும் அனுமதிக்கப்படுவதில்லை. சிறுவர்கள் 13 வயதில் ஆடவர்களாக அங்கீகரிக்கப்படும் பார்மிட்ஸுவா என்னும் புனித நிகழ்ச்சியில் பெண்களுக்கு அனுமதி கிடையாது. இப்போது சில மேலை நாட்டு நாகரீகம் பாதிக்கப்பட்டவர்கள் (!) பாட்மிட்ஸுவா என்று தங்களுக்குள்ளே ஒரு கொண்டாட்டம் ஏற்பாடு செய்துகொண்டாலும் பலத்த விமரிசனங்களுக்கு உள்ளாகிறார்கள்.

இன்னமும் இஸ்ரேல் நாட்டின் பெண்கள் பலர் பருவமைடந்தபின், அவர்கள் பிறப்பு உறுப்புகளில் சில பாகங்கள் நீக்கப்பட்டு தைக்க படுவதை செய்கிறார்கள். இதனால் கலவியின் போது அதிக வலியும் வேதனையும் வரும் என்பதால் பிற ஆண்களிடையே உறவு கொள்ள துணியமாட்டார்கள் என்பதும் நல்ல குடும்பத்து பெண்கள் இனப்பெருக்கத்திற்கு மட்டுமே உறவு கொள்வார்கள் எனவும் நம்புகிறார்கள். அமெரிக்கா வந்தபின்னும் இந்த நடைமுறை பலரிடம் மாறவில்லை. மயக்க மருந்துகள் இல்லாமல் செய்யப்படும் இந்த சிகிச்சையின் பின், சீழ்பிடித்தும் இரத்தபோக்கினாலும் இறக்கும் பெண்கள் அதிகம்.

ஆப்பிரிக்க நாட்டில் கணவன் இறந்த அன்றே அவன் மனைவியை கட்டாயப்படுத்தி ஊரில் இதற்காகவே இருக்கும் ஒருவருடன் உறவுகொண்டால்தான் அவள் கணவன் சொர்கத்திற்கு போவான் என்ற நம்பிக்கை இருக்கிறது.

கதோலிக்க மதத்திலும் இதுபோல பல மூடநம்பிக்கைகள் இருக்கின்றன. இப்போது கருச்சிதைவு உள்ளிட்ட பல விஷயங்களில் ஆதிக்கம் செலுத்துவது பரவலாக தெரிகிறது.

முன்பே உஷா எழுதியதுபோல இங்கே கலாச்சாரம் என்பது பெண்களைன் உடைகளே நிர்ணயிக்கின்றன அல்லது பெண்கள் அதை கட்டி காக்க வேண்டும் என்பதும் எதிர்பார்க்கப்படுகிறது. ஆடைகள் மாறுவதால் ஆதிக்கம் போவதில்லை என்றாலும், எந்த ஆடை அணியவேண்டும் என்று தேர்ந்தெடுக்கும் குறைந்த பட்ச உரிமையாவது வேண்டாமா? விரும்பி இருக்கும் போது நகைகளை அணிவது, அது இல்லாத குடும்பத்திலும் இந்த நகைகள் இருந்தால்தான் திருமணம் என்று விதிப்பதும், சில நகைகளை மங்களகரத்துடன் இணைத்து கட்டாயப்படுத்துவதும் வேறாக எனக்கு தோன்றுகிறது. காரடையான் நோன்புகளும் கர்வாசொத்துகளும் இருப்பது இதனால்தானே. கணவனோ அல்லது மனைவியோ நலமுடன் வாழ வேண்டும் என்பதில் யாருக்கும் மாற்றுக்கருத்து இருக்க முடியாது. ஆனால் அதுவே சடங்காகி பெண்கள் செய்ய வேண்டிய ஒன்றாக ஏன் மாற வேண்டும்?

இந்து மதத்தில் கோவில்களில் மரியாதை வழங்குவது முதல், பேய் விரட்டுவது, மந்திரம் சொல்வது வரை, ஆராதனை முடிந்தவுடன் முதலில் ஆண்களுக்கு கைக்குழந்தையானாலும் உட்பட தீர்த்தம் வழங்கியபிறக்கே பெண்களுக்கு என்பதில் இருந்து இன்ன பல கட்டுப்பாடுகள் சொல்லித்தெரியவேண்டியதில்லை. ஆனாலும் இததனை கட்டுபாடுகள் இருந்தாலும் இந்த மதங்களை வளர்ப்பதும் ஆராதிப்பதும் பெண்களே என்பது குறித்து முன்னமே எழுதி இருக்கிறேன்.

மனித நேயத்தை வளர்க்க வேண்டும் என்று சொல்வதே வேதனைக்குரிய விஷயம். இயல்பாகவே இருக்க வேண்டிய ஒன்றை இருக்க செய்வதற்கு கூட பேசவும் எண்ணவும் வேண்டுமென்றால் அது வேதனைக்குரிய விஷயம் தானே. புதிதாக கற்றுகொள்வது எளிதானது. ஆனால் கற்றுகொண்ட ஒன்றை மறப்பது கடினமானது.It is difficult to unlearn than to learn. இதில் கவலைபடகூடிய விஷயம் என்ன என்றால் சாதி பற்றிய எந்த தகவலும் கொடுக்க தேவையில்லா அமெரிக்காவிலும் கூட தங்கள் குழந்தைகளிடம் இந்த அடையாளங்களை திணிப்பதுதான். நாம் ஆயுதங்களை கீழே போடாத அருச்சுனர்களாக இருக்க ஆசைப்படுகிறோம்.காண்டீபத்தை கீழே போடாமலே பயமெதற்கு என்று கேட்பவர்களாகவே இருப்பதுதான் வேதனையான விஷயம்.


தீண்டாமை, மதங்கள், பெண்கள் இன்னபிற -3
March 16th, 2006 by பத்மா அர்விந்த்

நம்முடைய நாட்டிலே இதேபோல இலவச கல்வி அளிக்கப்பட்டாலும் பல கிராமங்களில் ஏழைகளின் நிலை வேறு. பள்ளிக்கு அனுப்பிவிட்டால் தன்னுடன் கூட வேலைசெய்ய, இன்னொரு வருமானம் வர என்றெல்லாம் இருக்கும் முதல் பிள்ளையை அனுப்ப மனம் வருவதில்லை. பெண் குழந்தைகள் தன்னைவிட சிறியவர்களை பார்த்துக்கொள்ளவும் மற்ற வீடுகளில் வேலை செய்யவும் அனுப்பி வைக்கப்படுகிறார்கள். என் தாதியர் சங்கிலி என்ற தொடர் பதிவில் இதனை பற்றி பல புள்ளிவிவரங்களோடு எழுதி இருந்தேன். நம்முடைய வீட்டில் நாமே விருப்பப்பட்டு வேலைகளை செய்வது வேறு, அதே இதுதான் நீ பிழைக்க செய்ய கூடிய ஒரே தொழில் என்று நிர்ப்பந்திக்கப்பட்டு செய்வது வேறு.

கல்வி அறிவு மன மாற்றத்தை தரும் என்றால் அந்த கல்வி அறிவு தரப்படவும் வேண்டும் என்று நினைப்பதில் தவறில்லையே. நாங்கள் இலவச கல்வி, சத்துணவு என்ற அனைத்தும் தருகிறோம் பெற்றோர்கள் அனுப்ப முன்வருவதில்லை என்றால் ஏன், எதனால் என்று யோசிக்க ஒரு அரசு முன்வர வேண்டாமா? அரச குடும்பத்தினருக்கு மட்டுமே வில்பயிற்சி அளிபேன் என்று ராதேயன்களை மறுத்த காலம் மாறி இப்போது ஜனநாயக நாட்டில் வாழும் ஒவ்வொரு குடிமகனும் சமமானவர்கள் என்ற நிலை வர வேண்டாமா?

ஸ்வதேஷ் என்ற திரைப்படத்தில் பார்த்ததுபோல பல கிராமங்களில் கல்விகூட கீழ்சாதி மக்களுக்கு மறுக்கப்படுவதும் உண்டு. இது சட்டப்படி குற்றம் என்றால், குற்றம் சொல்ல செல்லும் காவல் நிலையம், நீதிமன்றம் இவற்றில் இவர்களுக்கு ஏற்ற நீதி கிடைக்குமா? அமெரிக்காவில் நிலை மாறியதற்கு அரசாங்கத்தின் ஒத்துழைப்பு, சட்டங்கள், அதை(பெருமளவில்) மீறாத காவலர்கள்/நீதித்துறை காரணம்.

கீழ்சாதி பெண் ஒருத்தி மேல்சாதி ஆடவனை காதலித்த குற்றத்திற்காக அவளை 8 மேல் சாதியினர் கூட்டாக வன்புணராலாம் என்று தீர்ப்பளித்த பீகாரின் சட்ட பஞ்சாயத்து முன் அரசாங்க சட்டங்கள் எதுவும் செய்ய இயலவில்லை என்பது தெரியுமா?

படித்து முடித்து அமெரிக்காவிற்கு நல்ல பணியில் வரும் இந்தியர்கள் அனைவரையும் சமமாக பாவித்திருப்பார்கள் என்றால், கட்டுமான வேலை முதல் கும்பாபிஷேகம் வரை அத்தனை வேலைகளையும் செய்த ஒரு பெண் (அதே சமூகத்தின் இன்னொருபிரிவை சேர்ந்தவர்), சமையலில் உதவிக்கு செல்ல முன்வந்தபோது, கறிகாய் வேண்டுமானால் வெட்டி கொடு, பாத்திரங்கள் கழுவு ஆனால் நீ சமைத்தால் இவர்கள் உண்ண மாட்டார்கள் என்று சொல்லி தடுத்ததும், சாப்பிட வந்தபோது மூன்றாம் பந்தியில்தான் சாப்பிட வேண்டும் என்றும் சொன்னதால் இப்போது அந்த கோவிலுக்கே இவர்கள் செல்வதில்லை.இவர்கள் அனைவரும் மெத்த படித்தவர்கள்தான். நான் சமையல் செய்தால் அதை உண்ண மறுப்பவர்கள் உண்டு ( அவ்வளவு மோசமாக சமைக்க மாட்டேன் எங்கள் வீட்டில் சில சடங்குகள் செய்விக்கவில்லை என்பதால்). இவர்கள் மீதும் தவறில்லை, ஏன் என்றால் இது தவறு என்று புரிந்து கொள்ள முடியாத அளவிற்கு இவர்கள் சில சம்பிரதாயங்களை நம்புகிறார்கள்.

பூஜைக்கு முன் திடீரென பால் வாங்க சென்றுவிட்டு அங்கே உள்ள கடைக்காரரிடம் “நான் வரிசையில் நின்றால் என் மீது யாராவது பட்டுவிடுவார்கள். இது என் மதம் சார்ந்த நம்பிக்கை ஆகவே என்னிடம் உடனே காசை வாங்கி கொள்” என்று சொன்னவர்களை பற்றி இங்கே கதைகள் உண்டு. இல்லை என்றால் வழக்காடுமன்றத்திற்கு என் மதத்தை அவமானப்படுத்திவிட்டார் என்று சொல்வாரோ என்று உடனடியாக அவருக்கு உதவிசெய்த கடைக்காரரும் உண்டு.

எங்கள் வீட்டில் பல வயலில் வேலை செய்யும் விவசாயிகளின் குழந்தைகள் மாலை வேளையில் வந்து பாடம் படிப்பது வழக்கம். அதேபோல கோவிலுக்கு (வைத்தீஸ்வரன் கோவில்) வருபவர்கள் யாரானாலும் என் வீட்டில் பைகளை வைத்துவிட்டு குளித்து கோவிலுக்கு செல்வதும் வழக்கம். இதனால் என் பெற்றோர்களை அவமரியாதை செய்த உறவினர்கள் உண்டு. இதுவாவது நடந்தது 70களில். ஆனால் சமீபத்தில், 2005இல் வசதிகுறைந்த மாணவர்கள் படிக்க நிதிஉதவி என் கணவரிடம் கேட்டு வந்தவரிடம், என் சகோதரர்களும் உதவுவார்கள் என்றபோது” உங்களுக்கு புரியவில்லை. தவறாக கருத வேண்டாம், சடங்குகளில் நம்பிக்கை இல்லாத காரணங்களுக்காக உங்கள் சகோதரர்கள் இந்த உதவி செய்ய முடியாது” என்று சொன்னபோது எனக்கு நிஜமாகவே புரியத்தான் இல்லை.

தமிழ்நாட்டில் முன்னேற்றம் இருப்பதும், மக்கள் மனம் மாறிவருவதும், படித்த இளைஞர்கள்/பெண்கள் நிறைய பேர் அரவணைத்து செல்வதும் இருந்தாலும் இது குறைந்த சத விகிதமே. சக மனிதர்களிடம் அன்பு செலுத்த வேண்டும் என்பது இயல்பானது. நம்மை ஒருவர் எப்படி நடத்த வேண்டும் என்று எதிர்பார்க்கிறோமோ அதேபோல நாம் இன்னொருவரை நடத்த ஏன் மறுக்கிறோம்?


தீண்டாமை, மதங்கள், பெண்கள் இன்னபிற-2
March 15th, 2006 by பத்மா அர்விந்த்

மிஸிசிப்பி பர்னிங் என்ற திரைப்படத்தை பார்த்தவர்களுக்கு ஓரளவுக்கேனும் அமெரிக்காவில் இருந்த தீண்டாமை பற்றி புரியும். ஒரே உணவகத்தில் உணவு உன்ண முடியாது, அதேபோல ஒரே இடத்தில் நீர் அருந்த முடியாது என பல கட்டுப்பாடுகள். இவற்றை தாண்டி இவர்கள் யோசிக்க வைத்து மாற்றத்தை ஏற்படுத்தியதில் மார்ட்டின் லூதர் கிங்கிற்கு பெரிய பொறுப்பு உண்டு.

அடிமைகளாக புகைவண்டி பாதைகள் அமைக்க வந்த சீனர்களும் ஆப்பிரிக்க அமெரிக்கர்களும் முன்னேற முடிந்ததற்கு இங்கே ஏற்பட்ட மறுமலர்ச்சியும் காரணம். அமெரிக்கா முதலாளித்துவ நாடு, இங்கே பொதுநலம் முதல் அனைத்தும் நுகர்வோரை கவரவும், குறைந்த செலவில் திறமையுடன் செய்வது என்ற ஒரு சித்தாந்தத்தைஒட்டி இருக்கும். இதோ இந்தியர்கள் இன்னபிற மக்கள் வயதாகிவிட்டால் அவர்களை எப்படி பாதுகாப்பது அவரவர் தேவைக்கேற்ற, கலாசாரத்திற்கேற்ற மாதிரி முதியோர் இல்லங்கள் கட்டலாமா என்று இப்போதே யோசிக்க ஆரம்பித்துவிட்டது. மக்கள் தொகை குறைவு எனவே அதிக வேலை, குறைந்த மக்கள் என்பதால் இங்கே வேலைக்கான கூலி மிக அதிகம். இதை மாற்றவும் எளிய முரையில் குறைந்த நேரத்தில் செய்ய என எல்லாமே கருவி மயமமாக்க, அரசாங்கம் செயல்பட ஆரம்பித்திருக்கிறது.

60 வருடங்களுக்கு முன்னால் காற்று போகும் குழாய் உடைய கழிவறைதான் இங்கே. நிறைய கிராமங்களில் மின்சாரம் இருந்திருக்கவில்லை, அதேபோல நிறைய வயதான் காரியதரிசிகள் தங்கள் இளமைக்காலத்தில் கழிவறை இல்லாமல் கஷ்டப்பட்டதை, துணிதுவைத்து அதை எப்படி காய வைத்தார்கள் என்றெல்லாம் சொல்ல கேட்டிருகிறேன். இப்போது செப்டிக் குளம் உள்ள கழிவறைகள் கூட அவ்வளவாக இல்லை. சில 30 வருடத்திற்கு முன் கட்டிய வீடுகளில் மட்டுமே இருக்கிறது. ஆறு மாதத்திற்கு ஒருமுறை அதை சுத்தம் செய்வதும், பூமிக்கு கீழே உள்ள குழாய் மூலம் கழிவுப்பொருட்களை அகற்றுவதும், மாதம் ஒருமுறை அந்த குழாய்களை சுத்தம் செய்வதும் இதற்காக சுகாதாரத்தில் நற்சான்றிதழ் பெற்ற சுகாதார காவலர்களே.

வீட்டில் கழிவை அகற்ற மாதம் நகரசபைக்கு கட்டும் பணத்தில் ஒஉ குறிப்பிட்ட சதவிகிதம் மேலும் புது குழாய்கள் போட, இன்னொரு சதவிகிதம் இருக்கும் குழாய்களை பழுதுபார்க்க, மற்றும் ஒன்று பொதுநலத்திற்காகவும் இந்த சுகாதார காவலர்களின் நற்சான்றிதழை ஆண்டு தோறும் புதுப்பிக்க மேலும் புதிய திறமைகளை வளர்த்துக்கொள்ள எனவும் செலவாகிறது.

ஆசியா ஆ ப்பிரிக்கா போன்ற கண்டங்களில் உள்ள முக்கிய நகரங்களில் 1 மில்லியன் மக்கள் தொகை அதிகமாக உள்ள நகரங்களில் கூட நல்ல கழிவு அகற்றும் திட்டம் இல்லை.அதேபோல 1996 வரைக்கும் கிட்டதட்ட 220 மில்லியன் மக்களுக்கு நல்ல சுத்தமான குடிநீர் இல்லை.உலகில் 2.4 பில்லியன் மக்கள் கழிப்பறை வசதி இன்றியும், 2.4 மில்லியன் மக்கள் ஆண்டுதோறும் நீரினால் பரவும் வயிற்றுபோக்கினால் இறக்கிறார்கள் என்பதும் வருத்தமான செய்தி.

ஆசியாவில் 53% குறைவான மக்களுக்கே கழிப்பறை வசதிகள் உண்டு. இதில் கிட்டதட்ட 50% நவீன கழிப்பறையும் மற்ற 25% மனிதர்கள் வந்து மலம் எடுத்து சுத்தம் செய்யும் வகையிலும், இன்னும் 12% காற்று மூலம் அசுத்த காற்று நீங்கும் வசதி உடையது என்றும், மற்றைய 12% வெளியிடங்களில் ஒரு சுவர் மட்டுமே உள்ள இடமாகவும் உள்ளன.

சபர்மதி, மீரட் உள்ளிட்ட பல இடங்களில் மக்கள் நீண்ட தொலைவு சென்று மறைவிடங்களை தேடவேண்டியிருக்கிறது என்றும், இதில் பெண்கள் மிக தொல்லை அனுபவப்பதும் இதற்காகவே அவர்கள் இருட்டும் நேரத்தில் செல்வதும், அப்போது பாலியல் தொல்லைகளுக்கு உள்லாவதும் உலக சுகாதார மையத்தையும், மனித உரிமைகள் நிறுவனத்தையும் யோசிக்க வைத்திருக்கிறது.
நான் சிறுமியாக இருந்த போது அப்பா தபால்நிலையம் தரும் வீட்டில் இருந்தவரை நவீன கழிவறையுடன் கூடிய வீட்டில் இருந்தோம். அதன்பின் வாடகைக்கு வீடு எடுத்து இருக்கும் போது நவீன கழிப்பறைகள் இல்லாத இடத்தில்தான் இருந்தோம். எங்களால் அங்கே 6 மாதம் கூட இருக்க முடியவில்லை. நாற்றமும் சுகாதார குறைவும் பாதிக்க தொலைவில் இருந்து பள்ளிக்கு நடந்து வந்தாலும் பரவாயில்லை, நல்ல கழிவறையுடன் கூடிய வீடே வேண்டும் என்று தேடி இடம் பெயர்ந்துவிட்டோம். இதையே தினமும் தொழிலாக செய்பவர் மனநிலை எப்படி இருக்கும்? இதற்காக நான் என்ன செய்கிறேன் என்பது தொடரின் கடைசியில் எழுத இருக்கிறேன்.

இந்தியா நாறுகிறது என்ற புத்தக அறிமுகத்தின் இரண்டாம் பதிவில் வெங்கட் இதைப்பற்றிய தனது தீர்வுகளை எழுதி இருக்கிறார். ரோசா வசந்தும் இந்த நூலை அறிமுகப்படுத்தி இருக்கிறார்.

அமெரிக்காவில் அடிப்படையில் யார் வேண்டுமானாலும் எந்த தொழில் வேண்டுமானாலும் செய்ய முடியும். ஏதேனும் குற்றம் இழைத்தால் பூங்காக்களை சுத்தம் செய்வது, பொது கழிப்பிடங்களை சுத்தம் செய்வது போன்ற தண்டனைகளும் தரப்படுவதால் பொதுமக்களும் இதை பற்றிய புரிதல் உள்ள வர்களாக இருக்கிறார்கள். எந்த ஒருதிட்டமானாலும் ஒரு பகுதி மக்களுக்கு அதை எடுத்து சொல்ல (outreach)செலவழிக்கப்படுகிறது.

நீங்கள் எந்த ஊரில் வசிக்கிறீர்களோ அங்கே உள்ள பள்ளியில் இலவசமாக படிக்க முடிகிறது. புத்தகங்கள், வாத்திய இசை குழுவில் இருந்தால் அதற்கான இசைக்கருவிகள் அனைத்தும் இலவசமாக தரப்படுகிறது. தெரு முனையில் இருந்து அழைத்து செல்லும் பேருந்து முதல் அனைத்தும் இலவசம். நீங்கள் பேருந்தை உபயோகிக்கவில்லை என்றால், குழந்தைகளை நீங்களே பள்ளியில் கொண்டுவிட்டால், ஆண்டுக்கு $400 உங்களுக்கு திருப்பி கிடைக்கும் (NJ யில்). இவையும் நாம் கட்டுகிற பள்ளி மாநில வரியிலிருந்து ஒதுக்கப்பட்ட நிதியை கொண்டே செலவு செய்யப்படுகிறது. வறுமைக்கோட்டின் கீழ் வாழும் குடும்பங்களில் உள்ள ஒவ்வொரு குழந்தைக்கும் வாரம் உணவிற்காக food stamp, மற்றும் பணம் வழங்கப்படுகிறது. இதற்காக ஏழைகள் நிறைய குழந்தைகள் பெற்றுக்கொள்கிறார்கள், குழந்தைக்கான பணத்தை தவறாக செலவு செய்கிறார்கள் என்ற குற்றசாட்டெல்லாம் எழாமல் இல்லை. இதனால் பள்ளிக்கு அனுப்புவது, தொழில் நுட்ப கல்வி கற்பதற்கு குழந்தைகளை அனுப்ப வறுமையில் வாடும்பெற்றோருக்கும் தடை இல்லை.நம் ஊரைப்போல குழந்தையின் வருவாய் நின்றுவிடும் என்ற கவலை இல்லை. சில ஏழைகளின் வீடுகளில் குழந்தைகளும் வேலைக்கு போவது இந்த வருமானத்தால்தான்.
பள்ளி வரிப்பணத்தை எப்படி செலவு செய்வது முதல் அதை சாதாரண மக்களும் அறிந்துகொள்ளும் படி எல்லா விவரங்களும் நீங்கள் இணைய தளத்திலிருந்து தெரிந்து கொள்ள முடியும், அல்லது மாநகராட்ச்சியை அழைத்து கேட்டால் (right to know) விதிப்படி அனைத்து தகவலும் உடனே அனுப்பிவைக்கப்படுகிறது.

இங்கே மதங்களின் ஆளுமை நடுத்தரவயதுக்காரர்களிடம் உள்ளதுபோல இளைய தலைமுறையிடம் இல்லை. : These kids don’t go to church on Sunday” என்று வருத்தப்படும் பெற்றோர் உண்டு. மதங்கள் கருக்கலைப்பு, ஓரின திருமணம் போன்றவற்றில் தங்கள் கருத்தை சொல்லி எதிர்ப்பதுபோல தொழில் விஷயங்களில் தலையிடுவது இல்லை. நிறைய கூட்டங்களில் இவற்றின் பிரதிநிதியாக ஒருவரை அழைப்பதுண்டு இந்து கோவில்கள் முதற்கொண்டு. திட்டத்தின் ஆரம்பத்திலேயே அவர்களை சேர்த்துக்கொள்வதால் திட்டத்தை செயலாக்கும்போது அதன் மீதான எதிர்ப்புகள் குறைவு.
தொடரும்:)


தீண்டாமை, மதங்கள், பெண்கள் இன்னபிற- 1
March 13th, 2006 by பத்மா அர்விந்த்

தீண்டாமை, மதங்கள் இன்னபிற

சமீபத்தில் தங்கமணியின் பதிவும், சசியின் பதிவில் வந்த பின்னூட்டங்களும் ஜெயஸ்ரீயின் கோர்வையான விவாதமும் என்னில் எழுப்பிய சில சிந்தனைகளே இவை. நான் வாழுகின்ற அமெரிக்காவை அடிப்படியாக கொண்டு நான் பார்த்த பார்க்கும் சில நிகழ்வுகளையும் இந்தியா வரும்போது நானநேரடியாக பார்க்கும் அனுபவங்கள், நான் சிறுமியாக இருந்த போது பார்த்த அனுபவங்கள் இவற்றை அடிப்படையாக கொண்டு வந்த சிந்தனைகள் தொகுத்து எழுத முயன்றிருக்கிறேன். தங்கமணி போலவோ ஜெயஸ்ரீயை போலவோ கோர்வையாக எழுத எனக்கு தெரியாது என்பதும் , என் அனுபவங்கள் எனக்குள் ஏற்படுத்திய பாதிப்பை சார்ந்தே என் எண்ணங்கள் இருக்கும் என்பதும் வெளிப்படை. என் சிந்தனைகள் என் அனுபவங்கள் சார்ந்தவைதானே தவிர எந்த குழுவையும் சார்ந்தது அல்ல என்பதையும் சொல்ல தோன்றுகிறது. இது இன்னும் பல பாகமாக தொடர்ந்து வரும். இதில் என் அனுபவங்கள் என்பது நான் சந்தித்த பல்வேறு மதங்களை(இந்து, கிறித்துவம், யூதர், முகமதியர்) சார்ந்த பொருளாதாரத்தில் நடுத்தரவர்க்கமாக உள்ளவர்களின் அனுபவங்களையும் குறிக்கும்.

21ஆம் நூற்றாண்டை எட்ட விட்ட நிலையிலும் அறிவியலில் எத்தனையோ சாதனைகளை கண்டுவிட்ட போதிலும் இன்னும் தீண்டாமை உலகெங்கும் வியாபித்திருக்கிறது. ஒவ்வொரு நாட்டில் ஒவ்வொருவகையில். அமெரிக்காவில் நிற வெறி என்றால் ஐரோப்பாவில் பொருளாதார வகையில், இந்தியாவில் சாதீய அடிப்படையில் என்று மனிதனை மனிதன் தாழ்த்தி நடத்துவது நடந்துகொண்டே இருக்கிறது. ஆப்பிரிகாவிலும் அண்டையில் உள்ள ஹைட்டியிலும் கூட.

தீண்டாமை ஒழிக்க பல சட்டங்கள் இருக்கும் அமெரிக்காவில் கூட சட்டத்தின் காவலர்களாக இருக்கும் வழக்கறிஞர்கள், நீதிபதிகள் இன்ன பிற அதிகாரிகளும் அவ்வப்போது இதைக்காட்ட தயங்குவதில்லை.

ஒரு வன்புணர்வு அல்லது கொலை போன்ற இடத்தில் ஒரு ஆப்பிரிக்க அமெரிக்கன் எப்படியாவது தொடர்பு கொண்டுவிட்டால், இறந்தவனின் நண்பன் அல்லது அண்டைவீட்டுக்காரன் அல்லது எப்போதோ சண்டை போட்டவன் என்று ) உடனடியாக அவன் மீது சந்தேகம் வரும். கைரேகை முதல் நேரில் பார்த்த சாட்சிகள் அவனுடன் ஒத்து போகிறதா என்று பார்ப்பதுமுதல், அவனுடைய பழைய சரித்திரத்தை தேடுவது வரை நடக்கும்.

சமீபத்தில் ரிக்கி என்ற ஒருவனின் நண்பன் இறந்துவிட அங்கே இருந்த ஒரு கைரேகையுடன் ரிக்கியினுடையதை பொறுத்தி 3 ஆண்டாண்டுகள் சிரையில் இருந்தார். அவருடைய வழக்கறிஞர் விடாமல் போராடி FBI அரசு வழக்கறிஞருடைய சிறப்பு கைரேகை நிபுணர்கள் ரிக்கியின் கைரேகைக்கு இதில் என்ன பொறுத்தம் என்று ஆராய்ந்திருக்கிறார்களே அல்லாமல் இந்த கைரேகைக்கு ரிக்கியினுடையது பொறுந்துமா என்று பார்க்கவில்லை. முன்பே மனதில் தீர்மானித்த ஒன்றை நிரூபிக்க முயற்சிசெய்ததால் மேடும் பள்ளங்களும் இருப்பதாக சொல்ல முடிந்தது. 100 சதவிகித ஒப்புமை என்று சொன்னவர்கள் ரிக்கி விடுதலையானவுடன் மறு மொழி சொல்லவே மறுத்து அறிவியல் மீது குறைகூறிவிட்டனர்.

இதைப்போல பல நிகழ்ச்சிகள் உண்டு. சாதாரணமாக காவல் நிலையத்தில் பல முன்னே பிடிக்க பட்டு குற்றம் சுமத்தப்பட்ட (குற்றம் நிரூபிக்கப்பட்ட அல்ல) புத்தகம் உண்டு, அதில் ஏற்கெனவே பிடிபட்ட பல குற்றவாளிகளின் புகைப்படங்கள் (mug shot) உண்டு. அதை முதலில் காட்டி பாதிக்கப்பட்டவரிடம் இவரில் யாரையாவது உங்களால் அடையாளம் காட்ட முடியுமா என்று கேட்பார்கள். அதில் யாரையாவது கைகாட்டிவிட்டால், உடனே கைது, அடி என்று பாடாய் படுத்துவது அமெரிக்காவிலும் உண்டு.
இந்தியர்களுக்கெதிராக அமெரிக்காவில் வெறுப்பு அதிகமாக இருந்த ஒரு காலத்தில், தன்னுடைய காரில் எரிபொருள் நிறப்பிவிட்டு , அர்விந்த் பணிக்கு சென்றுவிட்டார். இது நடந்தது ஒரு சனிக்கிழமை, 1993 ஆண்டில். அப்போது நாங்கள் வசித்தது நியுயார்க்கில், சனிக்கிழமை என் சகோதரிவிட்டில் நான் இருக்க அர்விந்த் வேலைக்கு செல்வது வழக்கம். ஞாயிறன்று நாங்கள் மீண்டும் நியுயார்க் செல்வோம். அப்போது அந்த gas station வந்த ஒரு காகேசியன் பெண், அர்விந்தின் கார் ரெகிஸ்ட்ரேஷன் எண்ணை எழுதிக்கொண்டவர், அன்று மாலை மெட்டாசன் காவல் நிலையத்தில் hit and run என்று பதிவு செய்து எங்கள் எண்ணை தந்திருக்கிறார்.

அதன்பின் நியுயார்க், நியுஜெர்ஸி என்று தினமும் அர்விந்த் வேலைக்காக சென்ற போதும் காவலர்கள் நிறுத்தவில்லை. வழக்குக்கான விவரங்கள் ,கடிதங்கள் அர்விந்த் முதலில் நியுஜெர்ஸியில் மானவனாக இருந்த முகவரிக்கு சென்றிருந்திருக்கிறது. வேலை கிடைத்ததும் பணி நிமித்தம் கலிபோர்னியா சென்றதும் அதன் பின் திருமணமானபின் நியுயார்க் வந்த விவரங்கள் நியுஜெர்ஸியில் பதிந்திருக்கவில்லை. கலிபோர்னியாவில் புதிய ஓட்டுனர் உரிமை வாங்கியதாலும், நியுயார்க் வந்தவுடன் கலிபொர்னியாவிற்கு மட்டுமே விவரம் தர வேண்டி இருந்ததாலும் நியுஜெர்ஸி முகவரி மாற்றங்களை அறிந்திருக்கவில்லை. இங்கே பயண விதி மீறல்களுக்காக நிறைய வழக்குகள் உண்டு எனவே காவலர்கள் அதை கண்டுபிடிக்க 6 மாதமாவது ஆகும். நாங்கள் நியுஜெர்ஸி குடிவந்தபிறகு, தன்னுடைய கார் ரெஜிஸ்ட்ரேஷனை மாற்ற சென்ற போது அர்விந்த் மீதான கைதுக்கான வாரண்ட்டும், வழக்காடுமன்ற அழைப்பை அவமதித்த குற்றத்திற்கான வழக்கென்று சரமாரியாக வழக்குகள். ஆராய்ச்சி மாணவியாக இருந்த எனக்கு அப்போது அரசாங்க பணியில் யாரையும் தெரியாது என்பது ஒருபுறம், அர்விந்த்திற்கு இது போன்ற விவகாரங்கள் அதிக பயத்தை தந்தது ஒருபுறம். பிறகு நாங்கள் நீதிமன்றம் சென்று அர்விந்தை கைது செய்ய சொல்லி உடனடியாக கையோடு கொண்டு சென்ற ஜாமீன் கட்டி, அதன்பின் வழக்காடி வழக்கு தள்ளுபடி செய்ய 1 வருடம் ஆனது. இரவு நேரம் நாங்களாகவே காவல் நிலையம் சென்றது, இருவரும் பொறுப்பான பணிகளை செய்வது போன்ற காரணங்களால் எந்த வரைமீறல்களும் இல்லை, கைவிலங்கெல்லாம் இல்லை, போட்டோக்களும் இல்லை. எல்லாமே காதிங்களில் மட்டுமே என்ற போதும், வழக்கு தள்ளுபடியாகிவிட்ட போதும், இதனால் கிடைத்த மன உளைச்சலும், பிறகு நிரந்தர குடியுரிமை போது விளக்கம் சொல்ல வேண்டிய அவசியத்தையும் காட்டின. இதனால் எல்லா காகேசிய அமெரிக்கர்களும் அப்படி இல்லை, ஆனால் இதே ஒரு ஆபிரிக்க அமெரிக்கர், சாதாரண தின கூலிக்கு வேலை செய்பவர் சென்றிருந்தால் நிலைமை வேறாக இருந்திருக்கலாம்.

இதேபோல ஆப்பிரிக்க குழந்தைகள் கூட ஆசிரியைகளால் வார்த்தைகளால் குற்றம் சாட்டப்படுவதும் சாதாரண குழந்தைகள் கால்பந்து போட்டியில் ஒதுக்கிவைப்பதும் நடக்கிறது. என் மகன் குழந்தைகள் காப்பகம் சென்றபோது அவனுடைய நெருங்கிய நண்பனின் 3 வது பிறந்த நாளுக்கு அழைப்பு தரவில்லை. வகுப்பில் இருந்த 13 குழந்தைகளில் விடுபட்டவர்கள் என் மகன், ஒரு சீன பெற்றோருக்கு பிறந்த பெண், ஒரு ஆப்பிரிக்க அமெரிக்க குழந்தை மூன்றே பேர். நான் காப்பக நிர்வாகியிடம் எழுதித்தந்தேன். அப்போது ஆடம் என்ற மாணவனின் தந்தை என்னிடம் இது நிஜம், என்றோ தெரியப்போவதை இப்போதே தெரிந்து கொள்ளட்டுமே என்று சொல்ல, நான் அவரிடம் சொன்னது உன் பெற்றோரும் ஒருகாலத்தில் குடியேற வந்தவர்கள்தான் என்பதையும் நீ உணர்ந்துகொள் என்பதுதான். அதன்பின் அந்த பிறந்த நாள் பள்ளியிலேயே கொண்டாடப்பட்டது. பிறந்த நாள் இங்கே முக்கியம் இல்லை, அதன் ஊடாக தெரிந்த இன வேறுபாடு. .அதிகாரம், பொருளாதாரம் என்று எல்லா நிலையிலும் நல்ல நிலையில் இருக்கும் எனக்கு இதை தள்ளிவிட்டு போவதொன்றும் பெரிதில்லை. ஆனாலும் சில சமயங்களில் இதை ஒரு கருத்துக்காக விடுவதும் இல்லை. அந்த சம்பவம் பின் அந்த காப்பகத்தில் எல்லா குழந்தைகளுக்கும் அழைப்பு விடுக்க வில்லை என்றால் பள்ளி மூலம் அழைப்பு தர அனுமதி இல்லை என்ற ஒரு சட்டம் வர வழிவிட்டது. அவர் வீட்டுக்கு அவர் யாரை அழைக்கவும் யாரையும் ஒதுக்குவதும் அவருடைய தனிப்பட்ட விருப்பம். ஆனால் அதையே பொது இடத்தில் செய்யும் போது ஒதுக்கீடாக தெரிகிறது.

ஒரு இந்திய பெண் அவர்களுக்கு மேலைதிகாரியாக இருப்பதில் நிறைய ஆண்களுக்கு இங்கே சிறு நெருடல், ஆத்திரம் இருக்கிறது. ஆனாலும் நான் என் போரை தேர்ந்தெடுப்பதில் மிகவும் கவனமாக இருக்கிறேன். இன்னமும் நியுஜெர்ஸியில் சில இடங்களில் ஆப்பிரிக்க அமெரிக்கர்கள் செல்வதும் இல்லை, சென்றாலும் ஒருவித அசொகரியத்தை உணர்த்தபடுவார்கள். ஆனால் அமெரிக்காவில் யாரும் எதையும் எதிர்த்து போராடுவது எளிதாக்கப்பட்டிருக்கிறது. சட்டங்கள் கடுமையானவை அதே போல தீண்டாமை குற்றங்கள் நிரூபிக்கப்பட்டால் தண்டனையும் அதிகம். இங்கேயும் reverse discrimination என்று பேசும் கேகேசியன்கள் உண்டு. அதேபோல எந்த அரசாங்க வேலையும் குறிப்பிட்ட சதவிகிதம் ஆப்பிரிக்க அமெரிக்கர்கள், பெண்கள் இன்னபிர சிறுபான்மையினருக்கு ஒதுக்கீடு உண்டு. அதேபோல அரசாங்க ஒப்பந்தகளும் சிறு ஒதுக்கீடு உண்டு. அதை மீறுவது கடும் குற்றம். சமீபத்தில் ஒரு பிரபல மருந்து நிறுவனம் வேலைக்குறைப்பு செய்தபோது எந்த நாட்டு பின்னனி கொண்டவர்கள் எத்தனை பேர், மொத்தம் எத்தனை பேர் வேலையை விட்டு நீக்க வேண்டும் என்று உணர்ந்து அதை சரியாக கணக்கிட்டு வேலை நீக்கம் செய்யப்பட்டனர். இதனால் ஆராய்ச்சி செய்ய நிதி இருந்தும் , ஒரு கொரிய விஞ்ஞானி நீக்கப்பட்டார். சிறிதுகாலம் கழித்து (3 மாதம்) மீண்டும் பணிக்கு வந்தார் என்றாலும் வழிமுறைகள் இங்கே கடைபிடிக்க படுகின்றன.

அதேபோல சில ஆப்பிரிக்க அமெரிக்கர்கள் இந்த சட்டத்தை ஒரு துruப்பு சீட்டாக பயன்படுத்தவும் தவறுவதில்லை. வேலையில் குறை கண்டு இரண்டுமுறை எச்சரிக்கை விடுத்து பின் பணிநீக்கம் செய்தால் கூட நான் ஆப்பிரிக்க அமெரிக்கன் என்பதால்தான் இது நடந்தது என்று வழக்காடுமன்றம் போய்விடுவார்கள். இதனால் ATT, BMS, MERCK, Govt நிறுவனங்கள் நிறைய யோசித்து பல எச்சரிக்கை விடுத்த அத்தனை ஆதாரங்களையும் வைத்துக்கொள்ள வேண்டியதிருக்கிறது. ஆனால் இந்த இட ஒதுக்கீடும் சட்டங்களும் வாழ்க்கைத்தரத்தை, கல்வியறிவை மாற்றி இருக்கிறதா என்றால் சிறிதளவே என்பதுதான் உண்மை. மக்கள் மனமாற்றம் இன்னும் வெகுதூரம் போக வேண்டியதிருக்கிறது. இன்னும் வரும்


15 Responses  
  • பத்மா அர்விந்த் writes:
    March 13th, 2006 at 10:54 am

    ரிக்கி என்பவருடைய அனுபவம், வழக்கறிஞர் போராடிய விதம் சென்ற வாரம் CNN இல் ஒளிபரப்பாகியது.

  • சுரேஷ் - பினாத்தல் writes:
    March 13th, 2006 at 11:21 am

    உங்கள் பார்வை மிக வித்தியாசமாகவும் பரந்ததாகவும் இருக்கிறது பத்மா. தொடர்ச்சிக்காக மிக ஆவலுடன் காத்திருக்கிறேன்.

  • sarah writes:
    March 13th, 2006 at 12:49 pm

    //
    21ஆம் நூற்றாண்டை எட்ட விட்ட நிலையிலும் அறிவியலில் எத்தனையோ சாதனைகளை கண்டுவிட்ட போதிலும் இன்னும் தீண்டாமை உலகெங்கும் வியாபித்திருக்கிறது. ஒவ்வொரு நாட்டில் ஒவ்வொருவகையில். அமெரிக்காவில் நிற வெறி என்றால் ஐரோப்பாவில் பொருளாதார வகையில், இந்தியாவில் சாதீய அடிப்படையில் என்று மனிதனை மனிதன் தாழ்த்தி நடத்துவது நடந்துகொண்டே இருக்கிறது. ஆப்பிரிகாவிலும் அண்டையில் உள்ள ஹைட்டியிலும் கூட.

    //

    But i feel that in the country like ours ( developing country ) the discrimination starts even in terms of fundamental rights like food, dress and shelter too. Is it not Padma?. I feel that even though Europe has discimination in terms of richness, but the gap between the rich and poor purchasing the fundamental necessities like food, shelter and dress is not as compared to India. In India, we can clearly see the food one eats and we can tell whether he is rich or poor, or in dress and so on……

    As you say long way to go…..

    Thank you for the post Padma.

    sarah

  • Nithya writes:
    March 13th, 2006 at 3:30 pm

    Interesting beginning. All of us experience some form of discrimation everywhere, some more than others. But we have to make a conscious effort to not let that that affect us much. The changes to make these discriminations go away will have to come from within each of us.

  • துளசி கோபால் writes:
    March 13th, 2006 at 3:30 pm

    பத்மா,

    தொடர் நன்றாக ஆரம்பித்துள்ளது. சிறு குழந்தைகள் மனசுலே இப்படி வித்தியாசம் இருக்கறதுக்குக் காரணம்
    பெற்றொர்களேன்னு நினைக்கவேண்டி இருக்கு.

    இங்கே என் மகள் பள்ளிக்குப்போக ஆரம்பித்த புதுசுலே, நானே அந்த வகுப்பு முழுசுக்கும் ஒரு ‘பார்ட்டி’ எங்கள்
    வீட்டிலே ஏற்பாடு செஞ்சிருந்தேன். ஒவ்வொரு குழந்தையின் கூட அதனோட அம்மா/அப்பா யாராவது ஒருத்தர்ன்னு.
    அவர்களுக்கும் நம்மைப் பத்தி வேற எதோ முன்முடிவு இருந்துருக்கும் தானே?

    அன்னிக்கு எல்லோருமே வந்திருந்தாங்க. அவர்களுக்கும் நாமும் அவர்களைப் போலத்தான் என்றும், வித்தியாசம்
    ஒன்னுமேயில்ல ‘தோலின் நிறத்தைத் தவிர’ன்னு புரிஞ்சு போச்சு. அந்த வகுப்பு டீச்சருக்கும் ரொம்ப சந்தோஷமா
    இருந்ததுனு நாலுநாள் கழிச்சு எனக்கு ஒரு பரிசு வேற கொடுத்தாங்க. அப்படி அறிமுகம் செஞ்சுக்கிட்டதாலெ எனக்கும்
    நிறையப் பெற்றோர்களின் நல்ல நட்பு கிடைத்தது. சிலர் இப்பவும் நட்பைத் தொடர்கிறார்கள். பிள்ளைங்க படிப்பு
    வேலைன்னு இப்ப( 18 வருசம் ஆச்சே) பிரிஞ்சு போயிட்டாலும் பெரியவுங்க எங்கே பார்த்தாலும் நாலு வார்த்தை
    நட்போடு பேசி பசங்களைப் பத்தி விசாரிச்சுக்கிறோம்.

    ஆனா, சமீபத்துலே’டீன் ஏஜ் கேங்’சம்பந்தப்பட்ட குற்றமெல்லாம் ச்சீனர்கள் சம்பந்தப்பட்டதா இருக்கறது கொஞ்சம் கவலை
    தருது.

  • பத்மா அர்விந்த் writes:
    March 13th, 2006 at 4:23 pm

    நன்றி சுரேஷ். கூடுமானவரை அனுபவங்கள் சார்ந்ததாகவே எழுத இருக்கிறேன்.
    சாரா: அமெரிக்காவிலும் ஒருகாலத்தில் ஏற்றத்தாழ்வு நிறைய இருந்தது பொருளாதார அளவிலும் கூட. ஆனால் இங்கே தொழிலில் ஏற்ற தாழ்வுகள் இல்லை. அதேபோல அரசாங்கம் செய்யும் திட்டங்கள் பரவலாக பலருக்கும் தெரிந்திருக்க வேண்டியது செய்கிறார்(றோம்)ர்கள். அதேபோல தீண்டாமை குற்றசாட்டு வழக்கறிஞர்களும் ஆரம்பத்தில் இலவசமே. வெற்றி பெற்றால் மட்டுமே குறிப்பிட்ட சதவிகிதம் என்றும் வாதாட இருப்பதால் நிறைய பேர் நீதிமன்றத்தை எளிதாக அணுக முடிகிறது. இங்கே பொருளாதாரம் மற்றும் அனைத்து மக்கள் தொடர்புள்ள நிறுவனங்கள் பள்ளிகள் இவை அணுகும் மூறையும் வேறு. நம்முடைய நாட்டில் அரசியல் பல இடங்களில் தலையிட்டுவிடுவதும் அறியாமையும் ஒரு காரணம். இன்னும் தொடர்ந்து எழுத இருக்கிறேன். ஒருவேளை காரணம் கடைசியில் விளங்கலாம்.

  • பத்மா அர்விந்த் writes:
    March 13th, 2006 at 4:35 pm

    நித்யா: நன்றி. நீங்கள் சொன்னதை நான் ஆமோதிக்கிறேன். பரவலான விழிப்புணர்வு, மன மாற்றங்கள் அவசியம்.

    துளசி: பெற்றோர்களின் மூலமாக குழந்தைகள் தெரிந்து கொள்கிறார்கள் என்பது உண்மை. வயது வந்த பிறகு இணையம் சக நண்பர்கள் என் அபார்வை விரிந்துபடுகிறது. நீங்கள் சொன்னதுபோலவே இங்கே மெக்ஸிக பதின்ம வயதினரை சந்தேகமாகவே பார்க்கிறார்கள்.

    ஒரு சமுதாய மறுமலர்ச்சி வர பொருளாதாரம், அறிவியல், இடைபட்ட தலைமுறையின் கடின உழைப்பு, மன மத புரிதல்கள் என அனைத்துமே ஒரளவிற்கு காரணமாகின்றன.இந்த தொடரின் நோக்கமே பல்வேறு வகையில் நான் அறிந்துகொண்ட வரையில் எழுதுவதுதான்.

  • aathirai writes:
    March 13th, 2006 at 5:38 pm

    ‘அமெரிக்காவிலும் ஒருகாலத்தில் ஏற்றத்தாழ்வு நிறைய இருந்தது பொருளாதார
    அளவிலும் கூட. ஆனால் இங்கே தொழிலில் ஏற்ற தாழ்வுகள் இல்லை. ‘

    u hit it on the nail.

    சிறு குழந்தைகள் மனசுலே இப்படி வித்தியாசம் இருக்கறதுக்குக் காரணம்
    பெற்றொர்களேன்னு நினைக்கவேண்டி இருக்கு.
    true. no one is born with attitude.

  • maram writes:
    March 15th, 2006 at 8:51 am

    நல்ல பதிவு. பத்மா. எங்கும் இருக்கிறது ஒதுக்கி வைப்பு. இங்கு ஒதுக்கி வைக்கப்படும் கருப்பின மக்களின் மீறலும், வளர்ச்சியும் உடனே பதிவு செய்யப்படுகிறது., அதேபோல்., மற்றொருபுறம் பாதிக்கப்படும் அவர்களது குரல்கள் அதைவிட விரைவாக பதிவு செய்யப் படுகிறது!!.

  • தங்கமணி writes:
    March 15th, 2006 at 1:41 pm

    பத்மா, மேலே செல்லச் செல்ல கீழிருக்கும் வேறுபாடுகள் மறையத்தொடங்குகின்றன; அதனால் சிலர் வேறுபாடுகளே இல்லாமற் போயின என்று நம்புகிற மாதிரி இல்லாமல் உங்களால் பிரச்சனைகளை பார்க்கமுடிவது குறித்து சந்தோசம். சமூகத்தையும்/ தன்னையும் அதனதனுடைய சுயவடிவத்தில் பாக்க இயலுகிறவர்கள் குறைவாகவே இருக்கிறார்களோ என்று எண்ணிய சமயத்தில் உங்களது கண்ணோட்டம் நம்பிக்கை தருகிறது. உங்கள் புரிதல்களை எங்கலோடு பகிர்ந்துகொள்வதற்கு நன்றிகள்.

  • கில்லி - Gilli » Untouchability, Religions & Women - Padma Aravind writes:
    April 7th, 2006 at 7:00 pm

    [...] ஒன்று | இரண்டு | மூன்று | நான்கு [...]

  • dharumi writes:
    April 9th, 2006 at 3:20 am

    நம் சமூகத்தில் உள்ள ஏற்றத்தாழ்வுகளை நாம் சிலர் மிகப் பெரிதாக்குகிறோம்; சிலர் அப்படி ஒன்று இல்லவே இல்லை என்ற கண்மூடிப் பூனைகளாக இருக்கிறோம்; இன்னும் வரலாற்றைக் காரணம் காட்டி காட்புணர்வோடு இருக்கிறோம்; நிதர்சனங்களைப் புரியாது இருக்கிறோம். ஏறக்குறைய ஒவ்வொரு தனிமனிதரும் ஒரு தனித்தனிக் கருத்துக்களோடு இருக்கிறோம்.

    I am sure your article will throw some more light into all these issues. ஆரம்பமே இது ஒரு நல்ல தொடர் என்ற நிச்சயத்தைத் தருகிறது. வாழ்த்துக்கள்.

  • K.Sudhakar writes:
    April 9th, 2006 at 4:51 am

    மிக நல்ல பதிவு,
    அமெரிக்காவில் வசிப்பவர்களுக்கு மட்டுமல்ல, அமெரிக்க கம்பெனிகளின் நிர்வாகிகள் பிற நாட்டு நிர்வாகிகளுடன் பழகுவதிலும் இவ்வேறுபாடு காணப்படுகிறது. இது 90களில் அதிகம் இருந்தது. இப்போது குறைந்திருக்கிறது. நிர்வாகிகள் பிறநாடுகளில் சென்று தங்கியிருந்து வேலைசெய்ததில் கிடைத்த அனுபவ முதிர்வு ஒரு காரணமாக இருக்குமென கருதுகிறேன். இது சொந்த அனுபவம்.
    சாரா, ஐரோப்பாவில் இன்னும் வட ஐரோப்பியர்கள் ( ஜெர்மனி, டச்சு, டென்மார்க், பிரான்ஸ்..) தெற்கு ஐரோப்பியர்களைப் பார்க்கும் விதமே வேறு ( இத்தாலியர்கள், போர்ச்சுகீசியர்கள், மால்ட்டா,கிரீஸ்..). இருவித மக்களும் இருப்பின் ஒரு பனிப்போர் நடப்பதை கண்கூடாகக் காணலாம்.
    ஜாதி என்பதை வேறு விதமாகக் காண்கின்றனர்.
    பத்மா, நீங்கள் சொல்லும் reverse discrimination எனக்குப் புதிது. நான் முன்பு வேலை செய்த கம்பெனிகளிலிருந்து வரும் வல்லுநர்கள் பெரும்பாலும் வெள்ளைக்காரர்களாகவே இருப்பார்கள். ஒரே ஒரு ஆஃரோ அமெரிக்கன் இருந்தார்.. அவருடன் எனது தொடர்பெல்லாம் மின்மடலில் மட்டுமே. இங்கு வருவதற்கு அவருக்கு ஜூனியரான ஒரு வெள்ளைக்காரரையே அனுப்பியிருந்தனர்… கேட்டதற்கு இந்தியா மற்றும் அரபு நாடுகளில் வெள்ளைக்காரர்களையே இன்னும் மதிக்கின்றனர் என்று பதில் வந்தது!

    மேலும் எழுதுங்கள்.
    அன்புடன்
    க.சுதாகர்

  • swamy red bull writes:
    April 9th, 2006 at 5:20 am

    anmaayil america police oru karruparai nayai vitu kadika vaitha sambavam en manathil indrum maraya villai

    googleil kuda theda keedaikatha arumayana paathivu

    hope to be continue……

  • பத்மா அர்விந்த் writes:
    April 18th, 2006 at 9:32 am

    நன்றி ஆதிரை, மரம், தங்கமணி: இந்த வேறுபாடுகள் குறைவதற்கே இன்னும் காலமாகும் போல் இருக்கிறது.
    சுதாகர்: உண்மை. இன்னமும் இங்கே நிதி, மார்க்கெட்டிங், விற்பனை போன்ற துறைகளில் காகேசியன்களே அதிகம். இப்போது இங்கே reverse descrimination எதிர்த்து அதிக கூட்டங்களும் சட்ட மார்றாங்களும் நடக்கிறது.
    ஸ்வாமிரெட்புல்: நன்றி. கலிபோரினியாவில், நியுயார்க்கில் இந்த அத்துமீறல்கள் ஊடகங்களில் வருமளாவுக்கு வருடத்திற்கு ஒன்றாவது நடந்துவிடுகிறது


Leave a Reply

»  Uses: WordPress   »  Ahren Ahimsa   »  Redesign & Maintained by Oviam Solutions